ஈரானில் சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசே பயணச்செலவை ஏற்கவேண்டும்! – சீமான் கோரிக்கை

76

ஈரானில் 3 மாதங்களுக்கு மேலாக உணவு உறைவிடமின்றி சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை தமிழக அரசே பயணக் கட்டணம் செலுத்தி மீட்க வேண்டும்! – சீமான் கோரிக்கை

ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 650 மீனவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்றுமாத காலமாக உணவு, குடிநீர், உறைவிடம் இன்றி சிக்கித்தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான எவ்வித உதவியும் வேலைகொடுத்த நிறுவனமோ, ஈரான் அரசோ, இந்திய தூதரகமோ செய்யாமல் கைவிட்டது.

இதுதொடர்பாக கடந்த மாதம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது தற்போதைக்கு அவர்களை அழைத்துவரும் நிலை இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்த நிலையில் தற்போது கப்பல் மூலம் இந்திய அரசு அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அழைத்து செல்வதற்கான கட்டணமாக 100 அமெரிக்க டாலர்கள் கிட்டதட்ட 7500 ரூபாயை இந்திய வெளியுறவுத்துறை சார்பாக கட்டணமாக கேட்பதாக தகவல் வருகிறது.

ஏற்கனவே மூன்று மாதமாக வேலை, வருமானம் இல்லாது உணவுக்கே வழியின்றி தவித்து வருபவர்களிடம் பயணக் கட்டணம் கேட்பது என்பது சிறிதும் மனித தன்மையற்றச் செயல்.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் கவனமெடுத்து கட்டண விலக்கு பெற்றுக்கொடுத்தோ அல்லது கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியோ அவர்களை உடனடியாக தமிழகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்