நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததில், தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனும் செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். அத்தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன். மேலும், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனியாவது தொழிலாளர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி