13.07.2016 தினம் ஒரு சிந்தனை – 37 | செந்தமிழன் சீமான்
ஒரு ஞானியிடம்… எப்போதும் எல்லோரையும் குறை கூறி வந்த ஒரு சீடன் இருந்தான்.
ஒருநாள் அவனுக்கு உண்மையை உணர்த்த நினைத்த ஞானி, கை நிறைய உப்பை அள்ளி ஒரு குவளையில் கரைத்துக் குடித்துப்பார் என்றார்.
ஒரு மிடறு குடித்ததும் சீடனுக்கு முகம் அஷ்டகோணமானது.
எப்படி இருக்கிறது? என்றார் ஞானி,
உவர்ப்பாக இருக்கிறது என்றான் அவன்.
கை நிறைய உப்பை அள்ளிகொண்டு அருகில் இருந்த ஏரிக்கு அவனை அழைத்து சென்றார், அதில் அந்த உப்பைக் கரைக்கச் சொல்லி, இப்போது குடித்துப்பார் என்றார்.
எப்படி இருக்கிறது? என்றார், சுவையாக இருக்கிறது என்றான் அவன்.
இப்போது உப்பு தெரிகிறதா? என்றார் இல்லை என்றான் சீடன்.
அதே அளவு உப்புதான் அதிகத் தண்ணீரில் கரைக்கும் போது அது உவர்ப்பாக இல்லை, எந்தப் பாத்திரத்தில் கரைக்கிறோம் என்பதில்தான் சுவை அடங்கியிருகிறது.
அதைப்போல வலி ஏற்படும்போது நாம் பெரிய பாத்திரமாக மனதை ஆக்கிக்கொண்டால் வலி தெரியாது.
இனிமேல் குவளையாக இருக்காதே குளமாக இரு! என்றார் அந்த ஞானி.