சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச மாநாடு – லண்டன்!

32

இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு (29.09.2013) ஞாயிறு அன்று  லண்டனில் நடைபெற்றது. மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ளமாநாட்டு மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த  மாநாட்டில்  இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மைஅர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு காலை 10:00 மணிக்கு மாநாடு ஆரம்பமானது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் Geoffrey Robertson QC, Prof Francis Boyle, Prof Sornarajah, Dr David Matas, Emeritus Prof Dr Peter Schalk, Attorney Ali Beydou, Senator Robert Evans and Ron Ridenour ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இம் மாநாட்டிற்கு சிறப்பைக் கொடுத்ததோடு சிறீலங்கா அரசிற்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இம்மாநாட்டில் இன அழிப்பாலும், அடக்கு முறையாலும் பாதிக்கப்பட்ட வேற்றின சமூக பிரதிநிதிகளின் உரையும், தமிழினப் படுகொலைகளை வெளிக்காட்டும் காட்சி ஆதாரங்களோடும் அரிய தரவுகளோடும் இளையோர், மற்றும் தமிழ் அமைப்பு பிரதி நிதிகளாலும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் வேற்றின அமைப்புக்களைச் சேர்ந்த   Keri Lehair (Sikh),  News Net Work Oxford Bangladesh,  Kashmir JKLF, Tuareg North Africa, Matavele – Zimbawve, Borneo Nation, Kurdish National Congress  பேச்சாளர்கள் தமதுநாட்டில் தமக்கு இழைக்கப்படும் இன்னல்களை எடுத்துக்கூறியதுடன் சிறுபான்மை இன மக்கள் உலகளாவிய ரீதியில் ஒன்றுபட்டு ஒரே குரலாக 
ஒலிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் வரை சென்று எமது உரிமைகளுக்காக போராடவேண்டும் என வலியுறுத்தினர். 
மற்றும், அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனேட்டர்    Dr. Brian Senewaratene, இந்தியாவிலிருந்து திரு. மணிவண்ணன், ஆகியோர் Skype  மூலம் உரை நிகழ்த்தினர்.  Dr. Brian Senewaratene 
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனால் தமிழர்கள் தமிழீழத்தை அமைக்க உரித்துடையவர்கள் என்றும், சிங்களவர்கள் தமிழர்களுக்குஎந்த உரிமையையும் கொடுக்கத் தயாரில்லை என்று கூறினார். 
அமைச்சர் திருமதி. பாலாம்பிகை, தமிழீழத்திலுள்ள தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைமையையும் அங்கு அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளையும் எடுத்து விளக்கினார். அத்துடன் தனது அமைச்சுக்கானஇணையத்தளத்தையும் wce-tgte.org   அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதன் மூலம் உலக ரீதியாக இந்த மகாநாடு நேரலை  செய்யப்பட்டதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இம் மாநாட்டு நிகழ்வுகளை நேரில் பார்க்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் திரு. மகிந்தன்   UN article  99 ஐப் பற்றி விளக்கிக் கூறினார். அதாவது  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் பற்றியதாகும்.  தமிழர் மனித உரிமை மையம் தலைவர் திரு. கிருபாகரன் கூறும்போது நாம்   De Facto State   ஈழத்தில் வைத்திருக்கும்போது தமிழீழம் பிரகடனப்படுத்த தவறிவிட்டோம் என்று மனம்வருந்தினார். அத்துடன்  UN article  99 பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தார்.
காணி அபகரிப்பு என்ற தலைப்பில் வரைபடம், மற்றும் தரவுகள் மூலம் சிங்களவர்கள் வருங்காலத்தில் தமிழீழ நிலத்தை எப்படி அபகரிக்க இருக்கிறார்கள் என்பதை பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு. ரவிக்குமார் அவர்கள் சுட்டிக்காட்டினார். 
இளைஞர்கள் அகன்ற திரையில்  வரைபடம், வரலாற்றுச்சான்றுகள் மற்றும் தரவுகள் மூலம் தமிழர்கள் வந்தேறு குடிகள் இல்லை என்றும் “குமரகந்தம்” காலத்திலேயே பரந்து வாழ்ந்தவர்கள் என்றும் சிங்களவர்கள் தான் வந்தேறு குடிகள் என்றும்நிரூபிக்கும்  விதமாக சிறந்தவிளக்கம் அளித்திருந்தனர். அதில் ஒரு யுவதி இலங்கையில் தமிழர்களுக்கு அன்றாடம் நடைபெறும் கொடுமைகளை ஆவணங்களோடு அகன்ற திரை மூலம் எடுத்துக்காட்டி,  இதுவா ஜனநாயகம்? என்று கேள்விஎழுப்பினார்.  அடுத்து உரையாற்றிய   Act Now  வைச் சேர்ந்த திரு.  Graham William  கூறுகையில் இலங்கையில் இனப்படுகொலை என்பது நடந்தமைக்கான பல ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றினத்தவர்களும் இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்து பொருளாதார ரீதியில் பாரிய தாக்கத்தை சிறீலங்கா அரசிற்கு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெண்கள் அமைச்சின் ஆலோசகர் திருமதி. விஜயா ரட்ணம் அவர்கள் எல்லாத் தமிழ் அமைப்புக்களும் ஒற்றுமையாக இந்தக் கொடுங் கொலைகளை நீதிக்கு முன் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
பின்பு மாநாட்டின் தீர்மானம் பொதுமக்களின் பார்வைக்கு விநியோகிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களையும் திருத்தங்களையும் தருமாறு கோரப்பட்டது.  பலரும் தமது ஆதங்கங்களையும் எடுத்துக் கூறும்போது அதற்குச் சார்பான, எதிரானவிவாதங்கள் நடைபெற்று 12 தீர்மானங்களாக இருந்த பிரகடனம் 16 தீர்மானங்களாக விரிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
அதன் பின்பு நாடுகடந்த தமிழீழ அரசைச் சேர்ந்த திரு. நிமலன், திரு. மணிவண்ணன், திரு. சுரேன், திரு. இராஜேந்திரா, திருமதி. பாலாம்பிகை, திரு. பரமானந்தம், திரு. மாணிக்கவாசகர் (படத்தில் இடமிருந்து வலமாக) ஆகியோர், உரையாற்றுகையில் கடந்த மூன்று வருடங்களாக பல எதிர்ப்புகளுக்கும், கஸ்டங்களுக்கும் மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கும், தாயக மக்களினதும் புலம்பெயர் தமிழர்களதும் உரிமைகளுக்காக பலதரப்பட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து செய்திருக்கிறோம். மக்கள் எம்மை நம்பி வாக்களித்து தமது பிரதிநிதிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுப்பியதற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு எம்மால் இயன்றவை எமது கடமையை உணர்ந்து பணியாற்றியிருக்கிறோம் என்றும் கூறினர். 
அத்தோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை நாளையுடன் (30.09.2013) கலைக்கப்படவுள்ள நிலையில் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு எமது பணியை இயன்றவரை சரிவரச் செய்திருக்கிறோம் என்ற திருப்தியோடுஉங்களிடம் இருந்து விடைபெறுகிறோம். இனி வரப்போகும் தேர்தலில்  பொது மக்களாகிய நீங்கள்  இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டோ அல்லது சரியான செயல்பாட்டாளர்களை, புத்திஜீவிகளை, சுயபுத்தியோடு சிந்தித்து தாயக விடுதலைக்காக செயற்படக்கூடிய இளைய தலைமுறையினரை தெரிவு செய்து  தமிழர்களின் விடுதலைக்காக இந்த அரசாங்கத்தை வளருங்கள். இன்றைய சூழ் நிலையில் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்று மட்டுமே சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க கூடிய ஒரு மாபெரும் மக்கள் பலம் கொண்ட அரசாங்கமாக உள்ளது. என்று உருக்கமான வேண்டுகோளினை விடுத்திருந்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது ஆட்சிக்காலம் முடியும் இறுதி நாட்களில் மிகப்பெரும் சாதனையை படைத்து தன் வளர்ச்சியையும், தமிழீழ விடுதலை மீதான உறுதிப்பாட்டையும் வெளிக்காட்டும் விதமாக சர்வதேச  நாடுகளுக்கு தெளிவான உறுதியான செய்தியை சொல்லும் மாநாடாக இம் மா நாடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திமெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்