அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

185

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களைத் திடீரெனப் பணி நீக்கம் செய்ய முயலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. மிகக்குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணியிலிருந்து நீக்க முயல்வது அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் கொடுஞ்செயலாகும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன், ரூ.1500 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், நிதிச்சிக்கல் மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2013ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு பணி நிரந்தர உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் வஞ்சிக்கப்பட்ட தொகுப்பூதியப் பணியாளர்கள் கடந்த 13 ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்கள், காலி இடங்களைப் பொறுத்து படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீண்டும் வாக்குறுதியளித்த நிலையில் அவ்வாக்குறுதியும் இன்றுவரை நிறைவேற்றப்படாதிருப்பது வழக்கம்போல் இதுவும் திமுகவின் வெற்று ஏமாற்று வாக்குறுதிதானோ? என்ற ஐயம் எழுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் ஏமாற்றாது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, ஈட்டிய விடுப்புத்தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை மற்றும் கடந்த 10 ஆண்டுகாலமாக அனைத்துவகை ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி உயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக்கோரி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்