பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

166

பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தாய்வழிச்சமூகமாக விளங்கிப் பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கிப் போற்றிக்கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிற இன்றைய கொடும் நிலை கண்டு வெட்கித்தலைகுனிகிறேன். குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது.

பெண்களைப் போகப்பொருளாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள், ஊடகங்கள், விளம்பரங்கள் முதல் கல்விமுறை, ஆண் பிள்ளைகளின் வளர்ப்புமுறைகள் வரை எல்லாவற்றிலும் மாற்றம் உருப்பெற வழிவகை செய்வதே இக்கொடுமைகளிலிருந்து நீங்குவதற்காண வழியாக அமையும். அரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத்தண்டனையை பாலியல் வன்கொடுமைக்குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கெனச் தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமையாக்குவதே இக்குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும்.

ஆகவே, இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப்பணிநீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச்சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டுவர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளை மீட்க நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம்! – சீமான் உறுதி