தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின் ‘தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு’ – சீமான் சிறப்புரை

327

தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள எல். எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் உரையிலிருந்து சில துளிகள்!

தெற்காசியா முழுதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை நம்மால் இப்போது தூக்க கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள் வாளைதூக்கி குதிரை மேல் நின்று சுழற்றி வீசியுள்ளனர். பீட்சா, பர்கர் சாப்பிடும் நம்மால் தற்போது அதனை தூக்க கூட முடியாது. தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல் உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது. தமிழில் எழுதிவைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நன்றாக இருக்கும்.

6 லட்சம் கோடி கடன் தமிழக அரசுக்கு கடனிருக்கும் போது 80 கோடியில் கருணாநிதி நினைவிடம் அருகே பேனா சிலை வைக்க திட்டம் போடுகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் கேரளாவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணைச் சார்ந்தவர்கள்.

பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்கவைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். அதிகபட்சமாக இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நாம் தான் ஆட்சியில் இருப்போம் அப்போது நமது வளங்கள் அனைத்தையும் நாம் முறையாகப் பாதுகாப்போம்!

ஓடி வரும் நதியில் நமக்கு தேவையான நீரைச் சேமிக்கும் நிலை என்று உருவாகிறதோ அன்று தான் நாடு உருப்புடும். ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் அந்த தொழில் நுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்த முடியவில்லை. காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆனால், பாதிப்பை ஏற்படுத்தும் அணு மின்சாரம், அனல் மின்சாரம் ஆகியவற்றை அரசு தான் உற்பத்தி செய்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது. நிலக்கரியைத் தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி.

முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் அதிகம் பரவுகின்றன. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 9 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு பலிகொண்ட அனிதா மரணத்திற்கு அழுதவர்கள் இந்த ஆட்சியில் நீட் தேர்வு பலிகொண்ட மாணவர்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லவில்லை. மத்திய அரசை அனுசரிக்கவில்லை என்றால் அங்கிருந்து பணம் வராது என்பதால் அனுசரித்து செல்கின்றனர்.

இந்தியாவின், பொருளாதரத்தை நிறைவேற்றுவதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. மத்திய அரசிடம் விமானம், ஏர்போர்ட், துறைமுகம், கல்வி என எதுவும் கிடையாது. அனைத்தும் தனியார் வசம் போய் கொண்டிருக்கிறது சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ‘நாடா இது சுடுகாடா’ என்பதே தெரியாமல் கொடுமையாகப் போய்கொண்டிருக்கிறது.

ஒரு கார் வாங்கினால் ரூ.6 லட்சம் சாலை வரி எடுக்கப்படுகிறது. தண்ணீர், சாலை, மின்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டு விட்டு, அனைத்தையும் தனியாரிடம் பெறவேண்டியுள்ளது. முதல்வர்கள் அகில இந்தியாவின் புரோக்கர்களாக உள்ளனர். பிரதமர் சர்வதேச புரோக்கராக செயல்படுகிறார்.

மாங்கிபாத் என மூடிய அறையில் பேசுவதைவிட்டு விட்டு, பிரதமர் செய்தியாளரை சந்தித்து பேசவேண்டும். இது தமிழ் தேசியத்திற்கான போராட்டம் மட்டும் அல்ல உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை போராட்டத்திற்கான முன்னெடுப்பு. 75% தமிழ்நாட்டு வரி தமிழருக்கு 25% பொது நிதி என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. பொது வரிக்கான கணக்கு கட்டாயம் காட்டவேண்டும். எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை.

சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை தமிழர்கள் கண்டுள்ளனர். எதுவுமே செய்யாமல் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டும். வெள்ளை கார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் சேர சொல்பவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை வெளிநாட்டிற்கு செல்ல சொல்வது முரண்பாடு.

அரசியலில் கொள்கை என்ற ஒன்றே இல்லாதவர்கள் பாஜகவினர். ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில் இல்லை. மக்களுக்கான அரசு உருவாக வேண்டும்; அது நாம் தமிழர் கட்சியின் அரசாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார். மறுபுரம் அதிமுக, இந்த மண்ணை சேர்ந்த 2 பேரும் அடிமையாகி இருக்கிறார்கள்.

நாட்டில் அனைத்து சட்டங்களையும் பாராளுமன்றத்தில் விவாதம் செய்து கொண்டுவதில்லை; மாறாக அனைத்து சட்டங்களும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது.

நன்றி: https://tamil.news18.com/news/tirunelveli/a-person-suddenly-entered-the-nellai-district-mahila-court-with-a-sickle-774151.html

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்