மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுமிகள்! – பெற்றோர்களுக்கு சீமான் அவர்களின் ஆறுதல் செய்தி

171

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், சொல்லொணா துயரமும் அடைந்தேன். பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்படிக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளான நான்கு இளம் தளிர்களின் உயிரிழப்புக்கு ஆசிரியர்களின் கவனக்குறைவே முதன்மைக் காரணமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர்களை நம்பியே பள்ளிகளுக்கு அனுப்பபும் நிலையில், ஆசிரியப்பெருமக்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து ஒவ்வொரு நொடியும் கவனமாக செயலாற்ற வேண்டியது இன்றியமையாததது ஆகும். மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிகக்கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாகத் தங்களுடன் வரும் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் பரிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்த அன்பு மகள்கள் நால்வருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!

– சீமான்

முந்தைய செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – பி.பி. அக்ரகாரம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – சூரம்பட்டி 4 சாலை | சீமான் எழுச்சியுரை