முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி,…

0

அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்!

@CMOTamilnadu
@mkstalin

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் பணி நிலைப்படுத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் திமுக அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து, இலட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர்.

பல்கலைக்கழக மானியக்குழு கௌர விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை, உயர் நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது முதுமொழி. ஆனால், இங்கு கற்பிக்கும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கே மதிப்பில்லை என்பதுதான் புறச்சூழலாகும். பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு செய்யப்படாது, தற்காலிகப்பணி என்பதுதான் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.

ஆகவே, தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களது பணியினை நிலைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

கௌரவ விரிவுரையாளர் பெருந்தகைகள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முன்னெடுத்து வரும் தொடர் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு கோரிக்கைகள் வெல்ல துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி25 Innocent Civilians Shot Dead in Kashmir: This Terrorist Attack Exposes the BJP Govt’s Security Lapse!
அடுத்த செய்திஉலக புத்தக நாள்! – சீமான் வாழ்த்து!