திருப்பத்தூர் சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி – திருப்பத்தூர் சாலையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 11 பேர் உயிரிழந்து, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கின்றது. குறிப்பாக பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள இயலாத பெருங்கொடுமையாகும்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதன்மை இடம் வகிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு அரசு சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதோடு, போக்குவரத்து காவலர்கள் மூலம் அவை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



