தமிழுக்கும் தமிழர்க்கும் அருந்தொண்டு ஆற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த பெரும் பாசத்திற்குரிய அண்ணன் இளங்கோ செட்டியண்ணன் அவர்கள்மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் இளங்கோ அவர்கள் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு நடைபெற்று முடிந்த மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வரை தோள்கொடுத்து துணைநின்ற பெருந்தகையாவார்!
தாம் வாழ்ந்த மலேசியாவின் கேமரன் மலைப் பகுதியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கும், அருந்தொண்டாற்றிய பெருமகன்!
தமிழீழத்தாயக விடுதலையின் மீது பெரும்பற்றுகொண்ட அண்ணன் இளங்கோ அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகள் பல புரிந்த மாந்தநேயர்!
உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஆலோசகராக இருந்து தமிழ்த்தேசியம், தமிழ்ச்சமய கருத்தியலை வளர்த்தெடுத்த புகழுக்குரியர்!
அண்ணன் இளங்கோ அவர்களின் மறைவு தமிழினத்திற்கு நேர்ந்துள்ளஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ் மக்களின் கல்வி, அரசியல்,வேலைவாய்ப்பு, சமயம், சமூக சிக்கல்கள் என பல்துறைகளில் தன்னலம் கருதாது அவர் ஆற்றிய அரும்பணிகள் தமிழ் மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படும்!
அண்ணன் இளங்கோ அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், உலகத்தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்!
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் இளங்கோ அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



