பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

57

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் வழக்கமான நடைமுறைக்கு மாறாக ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு பதவி உயர்வு வழங்கி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. இது குறித்து ஆசிரியர் பெருமக்களும், சங்கங்களும் அரசிடம் பலமுறை முறையிட்டும் அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய பதவி உயர்வினை திமுக அரசு வழங்க மறுத்து தாமதித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக பணியிட மாறுதல் வழங்குவதால் மிகப்பெரிய குழப்பமும் ஏற்படுகின்றது. முதலில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வினை வழங்கிவிட்டால், பதவி உயர்வுக்கு ஏற்ப அதே பள்ளியிலோ அல்லது அருகில் உள்ள அரசுப் பள்ளியிலோ காலியாக உள்ள பணியிடங்கள் எளிதாக நிரப்பப்படும். மேலும், பதவி உயர்வு அளித்ததினால் உருவாகும் காலிப்பணியிடங்களையும் சேர்த்துக் கணக்கிட்டு அதன்பின் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கும் வழி ஏற்படும். ஆனால் திமுக அரசுப் பணியிட மாறுதலிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் லட்சக்கணக்கில் முறைகேடாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊழல் செய்வதற்காக, முதலில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு பதவி உயர்வு வழங்கி வருகின்றது. திமுக அரசின் இவ்வூழல் நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

ஒரே பள்ளியில் காலியாக உள்ள பணியிடத்தைப் பணியிட மாற்றம் மூலம் முதலில் நிரப்பிவிட்டு பின்பு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்குப் பதவி உயர்வினை வழங்கி தொலைதூர மாவட்டத்தில் வேறொரு பள்ளிக்கு அனுப்புவதென்பது ஆசிரியர் பெருமக்களுக்குக் கடும் தண்டனையாகவே அமையும்.

ஆகவே, திமுக அரசு இனியாவது ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பள்ளிக்கல்வித்துறையில் தகுதி உடைய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கிவிட்டு, அதன் பிறகு ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1788798085772329214

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? – சீமான் கண்டனம்