அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

207

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்று கழகம் ( ONGC – Oil and Natural Gas Corporation) அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு தோண்டுவதற்காக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

 

ஏற்கனவே அரியலூர் பகுதிகளில் இயங்கிவரும் பைஞ்சுதை ( சிமெண்ட் ) தொழிற்சாலைகள் தங்களின் தேவைக்காக தோண்டி எடுக்கும் சுண்ணாம்புச் சுரங்கங்களால் குற்றுயிராக காட்சியளிக்கும் அரியலூர் மாவட்டத்தினை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அறிவிப்பு வன்மையானக் கண்டனத்துக்குரியது.

 

வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று முந்தைய அதிமுக அரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அன்றைய அதிமுக அரசு அறிவித்ததையடுத்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், அதிமுக அரசால் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது முந்தைய அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. மேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவானது, அச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும்முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடரும் என்று கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி அரசின் முடிவை நாம் தமிழர் கட்சி அப்போதே கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டதை வாய்ப்பாக பயன்படுத்தி தற்போது 10 இடங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனம் முனைவது வேளாண் பெருமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிகாற்று மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வரும் நிலையில், தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

 

அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்துக்கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க்கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றிச் செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டமென்றால் `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற முந்தைய அதிமுக அரசின் பேரறிவிப்பு வெற்று கண்துடைப்பாகிவிடும்.

 

மேலும், நிலமும், வேளாண்மையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், எரி எண்ணெய், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வருவதால் 2019-ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எண்ணெய் கிணறு போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியே போதுமென்றும், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதியைத் தனியாகப்பெறத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எண்ணெய் கிணறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடுகிறது. அதனடிப்படையிலேயே தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

 

ஆகவே, அரியலூர் மாவட்டத்தை முற்று முழுதாக அழித்தொழிக்கும் கொடுந்திட்டமான புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்த, உடனடியாக அரியலூர் மாவட்டத்தினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்ட உட்பிரிவுகளை உடனடியாக நீக்குவதோடு, கெயில், சாகர் மாலா, ஹைட்ரோ கார்பன், எண்ணெய் கிணறு என்று வெவ்வேறு பெயர்களில் வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு திட்டத்தையும் புதிதாக தொடங்கவோ அல்லது ஏற்கனவே கைவிடப்பட்ட திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவோ தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

 

அதோடு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கக் கூடிய இந்திய ஒன்றிய அரசின் முடிவுகளுக்கு எதிராக வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல், பாராளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி திமுக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத் திரும்பப்பெறச் செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழ்நாட்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும், அரியலூர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய எண்ணெய் கிணறு உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைப்போகக் கூடாதென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

முந்தைய செய்திகிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!