'சமவேலைக்கு, சம ஊதியம்' வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் என மூன்று பிரிவாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஒரு வாரகாலமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக வளாகத்தில் இரவும் பகலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உரிய முறையில் தீர்வு காணாமல், போராட்டக்களத்தில் இருந்து ஆசிரியப் பெருமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் நோக்கில், அவர்களின் மீது காவல்துறையினர் மூலம் கடும் அடக்குமுறைகளை ஏவியுள்ள திமுக அரசின் கொடுஞ்செயலைக் கண்டிக்கும் விதமாக, இன்று (04-10-2023) மீண்டும் இரண்டாவது முறையாக போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, ஆசிரியர்களின் போராட்டக் கோரிக்கைகள் வெல்ல, நாம் தமிழர் கட்சி இறுதிவரை தோளோடு தோளாகத் துணைநிற்போம் என உறுதியளித்தேன்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தி, திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது வாழ்வில் ஒளியேற்றிவைக்குமாறு தமிழ்நாடு அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin
https://t.co/E7Q6LLb48Y





