இசுலாமிய உறவுகளுக்கு எனது பேரன்பும், மகிழ்ச்சியும்! – ஈகைப்பெருநாளில் சீமான் நெகிழ்ச்சி

211

‘பசித்துக் கிடப்பவன் ஒருவனுக்கு வயிறு நிறைய உணவளிப்பது ஆகச்சிறந்த தர்மம்’ எனும் போற்றுதற்குரிய பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் உதிர்த்த மானுட மொழிக்கேற்ப, மனிதநேயத்தைப் போதிக்கும் மகத்துவம் வாய்ந்த மார்க்கமான இசுலாத்தைத் தழுவி நிற்கும் எனதருமைச்சொந்தங்கள் யாவரும் தங்களது நோன்புக்கடன்களை முழுதாய் முடித்துவிட்டு, ஈகைப்பெருநாளைக் கொண்டாடுகிறவேளையில் அவர்களுடன் என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதமடைகிறேன்.

எவ்வளவு பெரிய செல்வந்தர் ஆயினும், எந்த நாட்டின் மன்னராயினும் இறைக்கடமையாற்ற நோன்பிருந்து பசி, பட்டினியின் துயரறிய வேண்டும்; பிறர்க்கு உதவ வேண்டுமெனும் நற்குணத்தைப் போதிக்கும் இசுலாத்தின் நோக்கம் உன்னதமானது! அம்மார்க்கத்தைத் தழுவி நிற்கும் எனது உயிருக்கினிய உறவுகளுக்கு எனது பேரன்பினை இந்நன்னாளில் உரித்தாக்குவதில் உளம் மகிழ்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – நீலகிரி மாவட்டம்