தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு!” – இது கோரிக்கையல்ல, நமது உரிமை! – சீமான் பேரறிவிப்பு

333

நாள்: 28.08.2022

“தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு”

என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன.

இந்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கவும், மக்களும் தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாட்டை” முன்னெடுக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோவில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும்.

இதனை, தமிழுக்காக 1965-இல் பெரும் மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான
செப்டம்பர் 3-ஆம் நாளன்று
தமிழ்நாடு முழுவதிலும் முன்னெடுப்போம். இதை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்சிப் பொறுப்பாளர்கள் இணைந்து குடும்பங்களுடன் அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று தமிழில் வழிபாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

மேலதிகச் செய்திகளுக்குக் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

தமிழ் மீட்சிப் பாசறை
செளமியா (மாநில செய்தித்தொடர்பாளர்)
9094784074

வீரத்தமிழர் முன்னணி
முனைவர் செந்தில்நாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
7904303147
தலைமை அலுவலகம் – 044-43804084

“தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு”

இது கோரிக்கையல்ல, நமது உரிமை!

அன்புடன்,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் ஹென்றி ஜோசப் மறைவு! – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி