சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்பயங்கரவாதம்! அறிவிக்கப்படாத அவசர நிலை! – சீமான் கண்டனம்

175

சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்பயங்கரவாதம்! அறிவிக்கப்படாத அவசர நிலை!
– சீமான் கண்டனம்

குஜராத் மதவெறிப்படுகொலைகளுக்கெதிராகக் குரல்கொடுத்து வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அவர்களும், பாஜகவின் அவதூறுப்பரப்புரைகளைத் தோலுரித்து வரும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் அவர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை போல, நாடு முழுக்க ஒரு அசாதாரணச் சூழலை உருவாக்கி, சனநாயகச்சக்திகள், சமூகச்செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மண்ணுரிமைப்போராளிகள் என யாவரின் குரல்வளையையும் நெரித்து, சனநாயகக்கோட்பாட்டைக் கேலிக்கூத்தாக்கி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக நரேந்திரமோடி இருந்தபோது, அரசாட்சியின் துணையோடு திட்டமிடப்பட்டு, அங்கு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மக்களின் மதவெறிப்படுகொலைகளுக்கு நீதிகேட்டும், அதிகாரப்பலத்தின் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் பாஜகவின் தலைவர்களைத் தண்டிக்கக்கோரியும் சனநாயகப்போராட்டம் செய்து வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அவர்களையும், குஜராத் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி ஶ்ரீகுமார் அவர்களையும் கைது செய்திருப்பது அதிகார அத்துமீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரத்தின் கீழ் குஜராத்தில் வாழ்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியப்பெருமக்கள் திட்டமிடப்பட்ட மதக்கலவரத்தின் மூலம் கொன்றொழிக்கப்பட்டு, இன்றுவரை அதற்கான நீதிகிடைக்கப்பெறாத நிலையில், அதற்காகப் போராடி வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட்டையும், காவல்துறை அதிகாரி ஶ்ரீகுமாரையும் பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்து, அவரது செயல்பாடுகளை மொத்தமாக முடக்க முயல்வது நாடெங்கிலுமுள்ள சனநாயகச்சக்திகளுக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். சனநாயகத்தைக் காத்து, மக்கள் நலன் பேணுவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தைத் தங்களது போக்குக்கு வளைத்து, எதேச்சதிகாரப்போக்கையும், அடக்குமுறையையும், அரச வன்முறையையும் கட்டவிழ்த்துவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பேராபத்தானவையாகும்.
ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிக்கையாளருமான முகமது ஜுபைர் அவர்கள் திடீரென்று கைது செய்யப்பட்டிருப்பதும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நாடெங்கிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இட்ட ட்விட்டர் பதிவு ஒன்றுக்காக விசாரணையென்றபேரில் அழைத்து, தற்போது புதிதாக வழக்குத்தொடுத்து சிறைப்படுத்தியிருப்பது அரசின் பழிவாங்கல் நடவடிக்கையின்றி வேறில்லை. நுபுர் சர்மாவின் நபிகள் குறித்தான அவதூறுப்பரப்புரையைத் தோலுரித்ததற்காகவே, இத்தகைய ஒடுக்குமுறை அவர் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது என்பது ஐயப்பாடுகளுக்கு இடமின்றி, தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்த நுபுர் சர்மாவைக் கைதுசெய்யக்கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்த நிலையிலும், அவரைக் கைதுசெய்யாத ஆட்சியாளர் பெருமக்கள், மதவுணர்வைப் புண்படுத்தியதாகக்கூறி பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரைக் கைதுசெய்திருப்பது வெட்கக்கேடானது; பாஜகவின் ஆட்சியாளர்களது கொடும் அநீதிகளைத் தோலுரித்த சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் , பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோர் மீதானக் கைது நடவடிக்கைகள் ஒன்றிய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதமாகும்.

ஆகவே, மக்களாட்சித்தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து, பாசிசப்போக்கை ஏவிவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் சனநாயக விரோதச்செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்து, சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் , பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகளுக்கெதிராக நாடு முழுவதுமுள்ள சனநாயகச்சக்திகள் ஒன்றுதிரண்டு, ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்படாத அவசரநிலையை முறியடிக்கப் போராட்டக்களத்துக்கு வர வேண்டுமெனக்கூறி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திArrests of Teesta Setalvad and Mohammad Zubair: A Blatant State Terror by the BJP Govt!