சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

216

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமானது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகளின் தொடர் இயக்க அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தைப் பல ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலை முற்றாகச் சீர்கெடுக்க வழிவகுக்கும் இவ்வரசாணையைச் சூழலியல் கண்ணோட்டமின்றித் தான்தோன்றித்தனமாக வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை, சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் பாதிப்பின் அளவினை வைத்து வகைப்படுத்தி, தொடங்குவது முதல் இயங்குவது வரை அனுமதிப்பதற்கு, தனித்தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டு இதுவரை செயலாக்கம் செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, அவை தொடர்ந்து இயங்குவதற்கு வழங்கப்படும் அனுமதியானது (Consent to Operate – CTO) முறையே, சிவப்புத் தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆரஞ்சு தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், பச்சைத்தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளுக்கும் செல்லுபடியாகுமென்றும், அதன்பிறகு அந்த அனுமதியானது தொழிற்சாலைகளின் செயல்பாட்டினைப்பொறுத்து இரண்டாண்டுகளுக்குள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட (Renewal of Consent – RCO) வேண்டுமெனவும் விதிமுறை நடைமுறையிலிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை இனி, தொழிற்சாலைகள் முறையே சிவப்பு – 5, ஆரஞ்சு – 10, பச்சை – 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது எனக்கூறியிருப்பது, எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்குப் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் பேராபத்தாகும். ஏற்கனவே, தமிழ்நாட்டிலுள்ள அணு, அனல் மின்நிலையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், வாகனத்தொழிற்சாலைகள், மருத்துவத்தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், சாயத்தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வேதித்தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தையும், நீரையும், காற்றினையும் மாசுபடுத்துவதோடு மக்களின் உடல் நலத்தையும், கெடுத்து புதிய புதிய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு முறையும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தி, அதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய மிக இழிவான அவலநிலையே தமிழ்நாட்டில் உள்ளது. இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கி, அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? எனக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசு, சுற்றுச்சூழல் விதிமுறைகளை மேலும் தளர்த்தியிருப்பது எவ்வகையிலும் சரியான நடவடிக்கை அல்ல. ஒவ்வொரு ஆண்டும் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கும்போது சுற்றுச்சூழல் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்தப்பிறகு, செயல்பட அனுமதிப்பதே, சரியான நடைமுறையாக இருக்க முடியும். அதனைவிடுத்து, பத்தாண்டு, பதினைந்தாண்டுகளெனக் கட்டற்று, சுற்றுச்சூழல் விதிமுறைகளில் சலுகையளிப்பதென்பது மீளமுடியாத பேரழிவினை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டினை உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக மாற்றிவிடும் அபாயமுமுண்டு. இது நம் வருங்காலத் தமிழிளம் தலைமுறையினருக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

நாம் தமிழர் கட்சியைப் பார்த்து, ‘சுற்றுச்சூழல் அணி’ என ஒன்றைத் தொடங்கிய திமுக, ஆட்சியில் அமர்ந்த பிறகு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இலட்சணம் இதுதானா? ஒரு சில தனியார் பெருமுதலாளிகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கக் கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வோடு சமரசம் செய்துகொள்வது மோசடித்தனமில்லையா? ஏற்கனவே, முறைகேடாகக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளாலும், அதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாத அதிகாரிகளாலும் ஊழல் மலிந்துக்கிடக்கும் சுற்றுச்சூழல் துறையில் அரசின் இத்தளர்வுகள் மேலும் பன்மடங்கு முறைகேடுகள் அதிகரிக்க வழிவகுப்பதோடு, தொழிற்சாலைப்பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி ஊழியர்களின் உயிருக்குப் பெருந்தீங்கினையும் ஏற்படுத்தும்.

ஆகவே, மண்ணுக்கும், மக்களுக்கும் பேரழிவினை ஏற்படுத்தக்கூடியவகையில் தொழிற்சாலைகளுக்கான அனுமதியில் கட்டற்ற கால அவகாசமளிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை) | சுற்றுச்சூழல் பாசறை
அடுத்த செய்திபெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவுக் கருத்தரங்கம் – சென்னை [ புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]