புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளைத் தடுத்து முறியடிக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை

562

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் , ‘அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஈழத்தின் பூர்வக்குடிகள் தமிழர்கள் இல்லை எனவும், தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களைத் துன்புறுத்தினர் எனவும், தமிழர்கள் போராடியதால்தான் கொல்லப்பட்டனர் எனவும் கற்பனைகளை உருவாக்கி, உண்மைக்குத் துளியும் தொடர்பில்லாத பொய்களை தமிழர் இன வரலாறாக மாற்ற முனையும் வன்மச்செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. யாழ் நூலகம் சிங்களர்களால் எரியூட்டப்படவில்லையெனவும், தமிழக மன்னர்கள் படையெடுத்தப் பின்புதான், தமிழர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர் எனவும், சிங்களர்களின் வருகைக்குப் பிறகே, இலங்கையின் வரலாறு தொடங்குகிறது எனவும் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்டு, ஈழ வரலாறே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறொரு கோணத்தில் எழுதப்பட்டிருப்பது உலகத்தமிழர்களை உள்ளம் கொதிக்கச்செய்கிறது.

இலங்கை அரசின் பாடப்புத்தகங்களே தமிழர்களின் சமயத்தை சைவம் எனக் குறிப்பிடும்போது, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இப்பாடநூல்களில் தமிழர்களை, ‘இந்துக்கள்’ எனக்குறிப்பதன் மூலம் , சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையை பௌத்த மதத்தினருக்கும், இந்து மதத்தினருக்குமான மத மோதலாக சுருக்கி, காட்ட முனையும் சூழ்ச்சி அம்பலமாகிறது. இவ்வாறு தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக்கூறி, அடுத்த தலைமுறைப்பிள்ளைகளுக்குத் தவறாகக் கற்பிப்பதன் மூலம் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தி, அவர்களது தாயகப்பற்றையும், இன உணர்வையும் மழுங்கடிக்கச்செய்யும் வஞ்சகச்செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பது தெளிவாகிறது.

உலகின் மூத்தத் தொல்குடி சமூகமான தமிழினத்தின் பழம்பெருமையையும், பெரும்புகழையும் பறைசாற்ற வரலாற்றுச்சான்றுகள் இல்லாது இலக்கியச்சான்றுகளே தரவுகளாக இருப்பது எந்தவொரு இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாப் பெருந்துயரமாகும். இத்தகைய துயர்மிகு நிலையில், ‘வரலாற்றில் அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே படைப்பார்கள்’ எனும் அண்ணல் அம்பேத்கரின் முதுமொழிக்கேற்ப, தமிழர்களின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி, இன ஓர்மையடைந்து மீளெழுச்சிகொள்வதற்கும், இழந்தத் தாயகத்தை போராடி மீட்டெடுப்பதற்குமாக வருங்கால தமிழ்த்தலைமுறையினருக்குக் கொண்டுசேர்ப்பதென்பது தலையாயக் கடமையாகும். அதனைத் தகர்த்து முறியடிக்கும் வகையில் நடைபெறும் இத்தகைய ஈனச்செயல்கள் பெருஞ்சினத்தைத் தருகிறது.

ஆகவே, புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக ஒரு சில அமைப்புகளால் பாடநூட்கள் எனும் பெயரில் திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், உள்நோக்கத்துடனான பொய்யுரைகளையும் தடுத்து முறியடித்து, தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலைநிறுத்த துணைநிற்க வேண்டுமென உலகத்தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்
அடுத்த செய்திபுலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!