உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

277

உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சரியான சமமான ஊதியம் கேட்டுக் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாதிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உயிர்காக்கும் உயர்ந்த பணியாற்றும் மருத்துவர்களை வீதியில் இறங்கி போராட வைத்து வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்.

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமையில்லை என்று நீதிமன்றங்கள் கைவிரித்த பிறகு, தாய்போல் தாங்கிப்பிடித்திருக்க வேண்டிய தமிழக அரசு அவர்களைத் தவிக்கவிட்டிருப்பது கொடுங்கோன்மை மனப்பான்மையின் உச்சம். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும் அதை வழங்காமல் தமிழக அரசு காலம் கடத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் உள்ள 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர் என்றால் அது மிகையல்ல. தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்தை இலாபமீட்டும் தொழிலாக மாற்றி நிறுத்தியிருக்கும் இக்காலகட்டத்தில் , பாமர மக்களின் உயிர்காக்கும் அரணாக அரசு மருத்துவர்கள்தான் உள்ளனர். அத்தகைய போற்றுதற்குரிய பெரும்பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய மதிப்பளித்து அங்கீகரிக்க வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்று சட்டப்பேரவையில் பெருமையாகக் கூறிய தமிழக முதல்வர், மற்ற மாநிலங்களை விடச் சிறப்பான ஊதியத்தை அவர்களுக்கு வழங்க மறுப்பதேன்? சுகாதாரத்துறையில் 24வது இடத்தில் உள்ள பீகார் மாநில அரசு, தனது மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் கீழாக, மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட நாற்பதாயிரம் ரூபாய் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது ஏன்? கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டம் அறிவித்தவுடனேயே அம்மாநில அரசு உடனடியாக ஊதிய உயர்வு வழங்கி, மக்களுக்கான உயிர்காக்கும் மருத்துவப்பணி தடைப்படாமல் தொடர்ந்து கிடைக்க வழிவகைச் செய்தது. அத்தகைய மக்கள் நலம்பேணும் நடவடிக்கையை தமிழக அரசு செய்யத் தவறியது ஏன்? 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 354/2009 படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தவேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை, கடந்த பத்தாண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன? கொரோனோ நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக 7500 கோடிகளுக்குமேல் செலவழித்துள்ளதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அரசு மருத்துவர்களுக்குச் சேரவேண்டிய ஊதிய உயர்வை வழங்க இன்னும் தயங்குவது ஏன்?

கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் உயிர்காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றியவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள்வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். இன்றளவும் பல வட மாநிலங்கள் கிராமப்புறங்களுக்கு மருத்துவ சேவைகளைக் கொண்டு சேர்க்காத நிலையில், தமிழகக் கிராமங்களில் ஓரளவாவது மருத்துவச் சேவை கிடைக்க அரசு மருத்துவர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையே முதற்காரணமாகும்.

ஆகவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, மக்கள் உயிர்காக்கும் அரும்பணியில் ஈடுபடவேண்டிய அரசு மருத்துவர்களை, இனியும் உரிமைக்காக போராடும் நிலைக்குத் தள்ளாமல், அவர்களது நீண்டகால நியாயமான கோரிக்கையான ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் “தமிழ்த் திருவிழா”
அடுத்த செய்திஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்