குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

395

குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை அழைக்க இரட்டைச்சான்றிதழ் முறை பயன்படுத்துவதைத் தவிர்த்து, ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் எனப் பன்னெடுங்காலமாக முன்வைக்கப்படும் கோரிக்கையை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கையின் பக்கமிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அது வெல்வதற்குத் துணைநிற்போம் என உறுதியளிக்கிறேன்.

ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பல்வேறு அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர். அந்தக் கொடுஞ்சட்டத்தை நீக்கக்கோரி 1920 ஆம் ஆண்டு, பெருங்காமநல்லூரில் போராடி உயிர்நீத்த 17 ஈகியரின் தியாகத்தாலும், தெய்வத்திருமகனார் ஐயா முத்துராமலிங்கதேவர் உள்ளிட்டத் தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் விடுதலைக்குப் பின், குற்றப்பரம்பரை சட்டம் முற்றாக நீக்கப்பட்டது. மேலும், அச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார
முன்னேற்றத்திற்காக அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களுக்கு 1979 ஆம் ஆண்டுவரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 1979ல் அன்றைய அதிமுக அரசு ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ (Denotified Tribes – DNT) என்பதை ‘சீர்மரபினர் வகுப்பு’ (Denotified Communities – DNC ) என மாற்றி (GO 1310/1979) அரசாணை வெளியிட்டு வரலாற்று பெரும் தவறைப் புரிந்தது. அதன் காரணமாக, சீர் மரபினருக்கு, ‘பழங்குடி மாணவர்கள்’ என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் கிடைக்கப்பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டது. ஆகவே, இழந்த உரிமைகளை மீண்டும் பெற, ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என்று பழையபடியே சான்றிதழ் வழங்கக்கோரிப் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

மிக நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு ‘சீர் மரபினர்’ என்பதை மீண்டும் ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ எனத் திருத்தி புதிய அரசாணை (GO 26/8.3.2019) வெளியிடப்பட்டது. ஆனால், புதிதாக வெளியிடப்பட்ட அரசாணை பத்தி 4ல், தமிழகத்தில் தொடர்ந்து ‘சீர்மரபினர்’ என்றே வழங்கப்பெறுவர் என்றும், மத்திய அரசின் உரிமைகளைப் பெறுவதற்கு மட்டும் ’சீர்மரபினர் பழங்குடியினர்’ என அழைக்கப்படுவர் என்றும் இரட்டைச்சான்றிதழ் முறையை உட்புகுத்தியது மிகப்பெரும் தவறாகும். 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு சட்டப்பிரிவு 3ல் உள்ள வரையறைப்படி, 1979 ஆண்டின் அரசாணை திரும்பப் பெற்றவுடன் மீண்டும் ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் சான்றிதழ் வழங்க எந்தத் தடையுமில்லாதபோது, இரட்டை சான்றிதழ் முறையை ஏற்படுத்தியது 40 ஆண்டுகளாகப் போராடி வந்த அம்மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகமாகும். மாநில அரசின் அரசாணை மூலம், மத்திய அரசு தொகுப்பிற்கே ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ எனச் சான்று வழங்க முடிகிறபோது, மாநில அளவிலும் அதேபெயரில் சான்று வழங்க எவ்விதத் தடையும் இருக்க முடியாது. எனவே, 2019ஆம் ஆண்டு அரசாணை (GO 26/8.3.2019) பத்தி 4ல் திருத்தத்தைச் செய்தாலே போதுமானது. அதற்கு தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டீனைக் காரணமாகக் காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, சீர் மரபினர் மக்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களை மீண்டும் பழையபடி ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்கப் புதிய அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்
அடுத்த செய்திதிருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்