தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்
அன்பின் உறவுகளுக்கு.!
வணக்கம்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு மழைக் காலத்தின்போதுதான் டெங்கு காய்ச்சலும், இன்னபிற நோய்களும் பரவி மக்களின் உயிரைக் குடித்தது. அத்தகைய துயர்மிகு நிலை மீண்டும் நம் மக்களுக்கு வராது தடுக்க வேண்டியது நமது தலையாயக் கடமை.
ஆகவே, தமிழகம் முழுவதும் இருக்கும் நாம் தமிழர் உறவுகள் தங்கள் பகுதிகளில் முகாம்களை அமைத்து “நிலவேம்பு”ச்சாறினை மக்களுக்கு வழங்கிட வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இத்தோடு காய்ச்சல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆலோசனைகளையும், “கருஞ்சீரகம்” போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த நமது வீடுகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த பொருட்களைப் பற்றிய விழுப்புணர்வு பரப்புரையையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி