செங்கோட்டையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

35

செங்கோட்டையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இந்துத்துவ இயக்கங்கள் நடத்திய விநாயகர் சிலை ஊர்வலம் கலவரமாக மாறி, இஸ்லாமிய சகோதரர்களின் கடைகளும், வணிக வளாகங்களும் சூறையாடப்பட்டு பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளச் செய்தி பெரும் மனவேதனையினைத் தருகிறது. இக்கலவரத்தின் மூலம் அங்கு ஏற்பட்டிருக்கிற பதற்றச்சூழலும், இயல்புவாழ்க்கை முடக்கமும் அம்மக்களைப் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன.

செங்கோட்டையில் ஏற்பட்ட இக்கலவரம் திட்டமிட்டவொன்றாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. எத்தனையோ கோயில் தேரோட்டங்களும், மக்கள் கூடுகிற வழிபாட்டு நிகழ்வுகளும் மிக இயல்பாய் எவ்விதச் சலசலப்புக்கும் இடங்கொடாது நடக்கிறபோது விநாயகர் சிலை ஊர்வத்தில் ஆண்டுதோறும் ஏதாவதொரு மூலையில் அசம்பாவிதங்களும், தேவையற்ற வன்முறைகளும் நடைபெற்று வருவது எதேச்சையாக நடப்பதல்ல! பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் மக்களை மதமாகத் துண்டாடி தங்களது அரசியலின் வேர்பரப்பத் துடிக்கும் மதத்துவேசமும், அடிப்படைவாதமும் கொண்ட ஒரு சதிச்செயலின் முன்நகர்வாகும். அச்சதிச்செயல்களுக்கும், இந்துத்துவ வேர்பரப்பல்களுக்கும் தமிழர் நிலமானது ஒருநாளும் இடங்கொடாது தக்கப்பதிலடியினைக் கொடுக்கும் என்பதனை வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்ற சான்றுகளில் இருந்து அறியலாம்.

ஆகவே, செங்கோட்டையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றி உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பொதுமக்களின் உடைமைகளையும், கடைகளையும் ஆய்வுசெய்து அவர்களுக்குரிய இழப்பீட்டீனைத் தர வேண்டும் எனவும், கலவரத்தில் காயம்பட்டவர்களுக்கு உரிய உயர்தர மருத்துவச் சிகிச்சையைத் தர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில்
அடுத்த செய்தி‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 2ம் ஆண்டு நினைவேந்தல் – ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான்