மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்: தமிழக அரசு தடுத்த நிறுத்த நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இப்படி தமிழ் மொழியை படிப்பதை தவிர்ப்பது திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி பாடத் திட்டத்தில் முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழிப் பாடமாக தமிழும் இருந்து வருகிறது. தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்கிற காரணத்தைக் காட்டி, தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம், பிரஞ்ச், ஜெர்மன் ஆகிய ஏதாவது ஒரு அந்நிய மொழியை தேர்வு செய்து படித்துவிட்டு தேர்வு எழுதுகிறார்கள். மெட்ரிக்குலோஷன் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படும் பள்ளிகளில் இரண்டாவது மொழிப் பாடமாக இருக்கும் தமிழுக்கு பதிலாக அயல் மொழிகளை படித்து தேர்வு எழுதுவது ஊக்குவிக்கப்படுகிறது.
இப்படி ஒரு நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், நாளையடைவில், தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும் . எனவே, இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழை புறக்கணிக்கும் நிலையை தடுத்திட வேண்டும்.
இதில் தமிழக அரசு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது. சமஸ்கிருதம், பிரெஞ்ச் போன்ற அயல் மொழிகளை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ள நிலையில், இம்மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் இவர்களிடமே திருத்துவதற்கு வருகிறது. அப்போது இந்த ஆசிரியர்கள் தங்களக்குள் பேசி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதும் தெரியவந்துள்ளது.
இப்பிரச்சனையில் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து படிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று பெற்றோர்கள் கூறுவார்களேயானால், தமிழ் மொழிக்கான மேனிலை பாடத் திட்டத்திற்கு இணையான பாடத் திட்டத்தை அயல் மொழிகளுக்கு வகுக்குமாறும், அதன் அடிப்படையில் தேர்வுகள் அம்மொழிகளில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிடலாம். பிற மொழியை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்கிற நிலையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்