டாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை

38

டாம் 999 மத்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்சி

முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்கிற கேரள அரசின் நிலைப்பாட்டை
மையமாக வைத்து கேரள அரசின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட டாம் 999
திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்துள்ள
வாதம் அமைதிக்கும், மாநில அரசின் அதிகாரத்ததிற்கும் எதிரானதாகும்.

முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து டாம் 999 திரைப்படம்
எடுக்கவில்லையென்று அதனை இயக்கிய சோகன் ராய் என்ற மலையாளி கூறினாலும்,
அது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் பெரும் அழிவை
ஏற்படுத்தும் என்பதை சித்தரிக்கவே எடுக்கப்பட்டது என்பதையும், அதனால்தான்
படத்தின் பெயரில் 999 என்ற எண் சேர்க்கப்பட்டதற்குக் காரணமாகும்
என்பதையும் அனைவரும் அறிவர். அது முல்லைப் பெரியாறு அணை கட்ட போடப்பட்ட
999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை நினைவூட்டவே என்பதையும் எவராலும் மறுக்க
முடியாது. இல்லையென்றால் இந்தப் படத்திற்கு கேரள அரசு நிதியுதவி செய்தது
ஏன்?

இப்படி உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னரும், அதற்கு மத்திய அரசின்
தணிக்கைக் குழு இந்தியா முழுவதும் திரையிட சான்றிதழ் அளித்தது. ஆனால்,
அந்தப் படத்தை திரையிட்டால் அது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப்
பாதிக்கும் என்பதாலேயே தமிழக அரசு அதன் வெளியீட்டிற்குத் தடை விதித்த்து.

இதனை எதிர்த்து சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நேர்
நின்ற மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மோகன் ஜெயின், ஒரு
படத்திற்கு மத்திய அரசு தணிக்கை சான்றிதழ் அளித்தப் பிறகு அதனை திரும்பப்
பெற முடியாது என்றும், அவ்வாறு மத்திய அரசால் சான்றிதழ் அளிக்கப்பட்டத்
திரைப்படத்தை வெளியிட மாநில அரசு தடை விதிக்க அதிகாரமில்லை என்றும்
கூறியுள்ளார்.

டாம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் அது பொது அமைதிக்கு பங்கம்
விளைவிக்கும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது என்பதை
விளக்கிய பிறகும் இவ்வாறு மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார்
என்றால், தமிழ்நாட்டில் பொது அமைதி கெட வேண்டும் என்று மத்திய அரசு
விரும்புகிறதா, தமிழர்களும் மலையாளிகளும் அடித்துக் கொண்டு சாக வேண்டும்
என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கேட்கிறோம்.

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட விடயமாகும்.
அது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியானது. டாம் 999 திரைப்படத்தின்
நோக்கம் என்வென்பதை அதன் இயக்குனர் சோகன் ராயை அழைத்துப் பேசி உறுதி
செய்துகொண்ட பின்னர்தான் தமிழக அரசு 6 மாத காலத்திற்கு தடையை விதித்தது.
ஆனால், அது குறித்து தமிழக அரசுடன் கலந்து பேசி, இரு மாநில மக்களுக்கு
இடையே பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் வாக்குமூலம் தாக்கல் செய்யாமல்,
பிரச்சனையை உண்டாக்கும் நோக்குடன் மத்திய அரசு வழக்குரைஞர்
வாதிட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

டாம் 999 திரைப்படம் தயாரிக்கப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்னணியில்
உள்ள கேரள அரசின் சதித் திட்டத்தையும் சரியாகப் புரியவைக்க மத்திய அரசு
தவறும் காரணத்தினால், அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு
தமிழக அரசு விதித்துள்ள தடையை உச்ச நீதிமன்றம் நீக்குமானால், அதனால்
ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திபெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்தி“மலையாள மனோரமா” அரங்கினை வெளியேற்ற கோரியும, காலச்சுவடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய தோழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பாராட்டுக்கள்!!