பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா

23

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல் செய்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (18-05-2011) மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.

அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.

அரங்க நிகழ்வுகள் இடம்பெற்ற அதேவேளை, முள்ளிவாய்க்கால் உட்பட தாயகத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான மலர் வணக்கம் இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக லலிந்திக்கா விஜயநாதன் ஆங்கிலத்தில் ஆரம்ப உரை நிகழ்த்திருந்தார்.

•    இவரைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழ் இளையோர் சார்பாக ஆர்.பைரவி,
•    சமூகங்களை குற்றவாளிகள் ஆக்குவதற்கு எதிராக பரப்புரை அமைப்பைச் சேர்ந்த மனித உரிமையாளர் ஹியூகோ சால்ரன்,
•    பிரித்தானிய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான தாராண்மைவாதக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சைமன் ஹியூஸ்,
•    பிரித்தானிய தேசிய ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர் மார்டின் பவல் டேவிஸ்,
•    லண்டன் அதிகார சபையைச் சேர்ந்த றோஜர் ஈவான்ஸ்,
•    அக்ட் நவ் அமைப்பின் இயக்குனர் ரிம் மார்ட்டின், மற்றும் டெபோறா லெங்,
•    போரை நிறுத்துவதற்கான பரப்புரை அமைப்பின் உறுப்பினர் ஜோன் றைஸ்,
•    ஹார்லோ தொகுதி ஆளும் மரபுவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் ஹாபொன்,
•    ஈலிங் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மாவின் நாடாளுமன்ற செயலும், ஈலிங்; நகரசபை உறுப்பினருமான ஜூலியன் பெல்,
•    லண்டன் தொகுதியைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களான தொழிற்கட்சியின் குளோட் மோர்ஸ், தாராண்மைவாதக் கட்சியின் பரோன்ஸ் லுட்போர்ட்,
•    ஈஸ்லிங்ரன் வடக்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பன்,
•    பசிட்லோ பிரதேச தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான்,
•    கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான விரிவுரையாளர் அன்றூ கிக்கின்பொட்டம்,
•    சவுத் என்ட் பிரதேச சபை உறுப்பினர் கலாநிதி றொபின்,
•    இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் ஜனனி ஜனநாயகம்,
•    பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக ரவிக்குமார்,
•    உலகத் தமிழர் பேரவையின் (ஜி.ரி.எஃப்) தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்,ஜே.இம்மானுவேல் அடிகளார் ஆகியோர் உரையாற்றினர்.

இவற்றுடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் திருமதி றூபி குமார், திருமதி நிவேதா உதயராஜன், மற்றும் ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வழங்கிய அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, அனைத்துலக போர்க்குற்ற சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள பரப்புரையை, ஆளும் மரபுவாதக் கட்சியின் இல்போர்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஆரம்பித்து வைத்து உரையாற்றி இருந்தார்.

நிறைவாக நாடு நடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனின் உரை ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் நடுவே அரங்கத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மீது உறுதி எடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் பாடல் ஒன்றும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அந்த உறுதியுரையில்,

முள்ளிவாய்க்கால் வெளியில் மூச்சாக்க கலந்த ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
அடக்குமுறை ஆக்கிரமிப்பின் கீழ் மாற்றுவலுவுள்ளோர் ஆக்கப்பட்டு தவிக்கும் ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
அன்னை, தந்தை இழந்து இளமையிலே தனிமையாக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் எம்மினக் குழந்தைகள் மீது உறுதி!
சிங்கள ஆக்கிரமிப்பால் நாதியற்றோராகி சொந்த நாட்டில் தவிக்கும் எம் சொந்தங்கள் மீது உறுதி!
தாய் மண் மீட்கும் புனிதப் பணியில் விதையாகிய எம் வீர மறவர்கள் மீது உறுதி!
எம் தாய் மண்ணின் விடுதலை கிடைக்கும்வரை எம்மினத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம். இது அந்த முள்ளிவாய்க்கால் மண் மீது உறுதி!
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அரங்கத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்தகொண்ட அனைத்து மக்களும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த அதேவேளை, தமிழ் மக்கள் மீதான தொடரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தி தீர்வைப் பெறவும், போர்க்குற்ற நபர்களை நீதியின் முன்னிறுத்தவும் சபதம் எடுத்துக் கொண்டதுடன், அதற்காகாகத் தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திதமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது – குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம்
அடுத்த செய்திமே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்