இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, போர் விதிமுறைகளை மீறி தமிழ் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் , பள்ளிகூடங்கள் மீதும் குண்டு வீசிக்கொன்றதும் , உணவு மற்றும் குடிநீரை பொதுமக்களுக்கு செல்லவிடாமல் தடுத்ததும், இன்னும் லட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் நிரந்தர கைதிகளாக வைத்து சித்ரவதை செய்வதும், பாதிக்கப்பட்ட மக்களிடையில் சேவைகளை செய்ய இன்னும் ஐ.நா சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்றவர்களை அனுமதிக்காததும்மான போர்க்குற்றங்களை செய்து வருகிற இலங்கை அரசாங்கத்தையும், அதற்கு சகல விதங்களிலும் துணை நிற்கிற இந்திய அரசாங்கத்தையும் கண்டித்து உண்ணாநிலை அறப்போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் 4-4-2011 அன்று திருப்பூர் தொடர் வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்தராசு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இலக்கிய அணி செயலாளர் பல்லடம் வான்மதி வேலுசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கோபி செழியன், சேலம் அருண் , மனித நேய பாசறை தலைவர் சக்திவேல், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாநில செயலாளர் தமிழ்நேசன்,பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை செயலாளர் வை.அய்யாசாமி,தாராபுரம் நாம் தமிழர் சுரேசு , அரவிந்தன்,அவினாசி தமிழன் வடிவேல், சோமனூர் அருண் ரங்கராஜன்,பல்லடம் குமார் , திருப்பூர் கவிஞர் சத்தியமூர்த்தி,கவிஞர் அன்னையன்பன்,அருள், முத்துக்குமார்,எழுச்சி பாடகர் மண்ணை தங்கம்,நில அளவையாளர் விக்னேசு ஆகியோர் இலங்கையின் போர்க்குற்ற செயல்களையும் அதற்க்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு துணை போனது என்பதையும் விரிவாக விளக்கி பேசினார்கள்.
மாலை 4 மணிக்கு நடந்த ஆர்ப்பட்டத்திற்கு நாம் தமிழர் தலைமை நிலைய பேச்சாளர் திலீபன் தலைமை வகித்தார்.ஐ.நா வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை இந்தியா ஆதரிக்க வேண்டியும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரியும், ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ அவர்களுக்கு தனிநாடு அமைத்துத் தரக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் திலீபன் நிறைவுரையாற்றினார். இறுதியில் தோழர் சண்முகசுந்தரம் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்துவைத்தார்.