வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்

1346

சென்ற ஆண்டு (2010) தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பின் வருமாறு ..

இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை…..

யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.

வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.

வெல்வெட்டி துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.

வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பேசப் பட்டது.

வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.

அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதி யுத்தத்தில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத் தக்க ஒரு நிகழ்வு.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.

முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!

வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அத‌னால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.

வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.

வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனான‌ திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.

பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.

அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.

அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.

அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.

கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிட‌க்கிறது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் – புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONS OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் எனமாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது. இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு மட்டக்களப்பிற்கு வேலையின் நிமித்தம் மாற்றல் கிடைத்தது. அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் ஈழாளனின் நினைவில் பிறந்த குழந்தையுடன் அதாவது நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினார்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்த வீதியில் குடியிருந்த அனைத்துக் குடும்பங்களுடனும் நல்லுறவை வைத்திருந்த இவர்கள் அமைதியானவர்கள் மற்றும் பிரச்சனை ஏதுவும் இல்லாதவர்கள் என்பதாலும் அவ்வீதியின் அனைத்து வீடுகளிலும் சிறுவனாகிய தலைவர் பிரபாகரனுக்கு நிரம்ப மரியாதை.

குறிப்பாக அவ்வீதியில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறுவயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார். எதிர் எதிராக இருந்த வீடுகள் என்பதைவிட பண்டிதர் சபாபதியின் மகளான முத்துலெட்சுமிக்கு சிறுவன் பிரபாகரன் மீது அளவுகடந்த வாஞ்சை.

இளம் ஆசிரியரான அவர் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் பிரபாகரனைத் தூக்கிச் சென்று விளையாடுவார். இவ்வாறே பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்னேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார்.

பண்டிதர் சபாபதி என்பவர் மட்டக்களப்பு தந்த சிறந்த கல்விமான். இலக்கியவாதி. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்ற இவர் மதுரை ஆதினத்தால் கவிராஜகேசரி என்னும் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டவர். “மாரியம்மன் மான்மியம்” மற்றும் “விடுதலை வேட்கை” போன்ற நூல்களை எழுதி வெளியிட்ட இவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அதிஷ்டசாலியே தலைவர் பிரபாகரனாவார்.

இவ்வாறே தமிழ்க்கவியை கசடறக் கற்ற மட்டக்களப்பு பண்டிதர் வீட்டில் மழலைமொழி பயின்ற தலைவரிடம் தமிழ் உணர்வு குடிகொண்டதில்ஆச்சரியமில்லை. இவ்வாறே வீட்டில் கடைக்குட்டியான செல்லம் முன்வீட்டில் பண்டிதர் குடும்பத்தின் செல்லம் என விளையாட்டும் பொழுதுபோக்குமாகக் கழித்தான் சிறுவன் பிரபாகரன். 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை (இன்றைய மஹஜனாக் கல்லூரி) தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப் பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963லேயே தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுருவித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார். இந்நிலையிலேயே வெள்ளைச்சாமியால் முதன்முதலாக புரியாத புதிராக அடையாளம் காணப்பட்டார்.

இவ்வாறு மட்டக்களப்பு தாமரைக்கேணியில் குறுக்குவீதியில் பண்டிதர் சபாபதியின் 7ம் இலக்க வீட்டில் இவர்கள் குடியிருந்த பொழுது இவர்களுடைய வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்தவர்களே அரியகுட்டி செல்லத்துரை ஆசிரியர் குடும்பமாகும். மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு தாமரைக் கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என அழைக்கப்பட்ட அன்னப்பாக்கியத்தை திருமணம் முடித்திருந்தார். பீமன் என்னும் நாடக பாத்திரத்தில் முன்பு நடித்ததனால் இவரை பீமன் செல்லத்துரை என்றும் குறியீட்டுப் பெயராலும் அழைப்பர்.(1999 இலும் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை இந்தக் குறியீட்டுப் பெயரையே பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

நான்கு பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொண்ட இவர்களிருவருமே வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகத் தொழில் புரிந்து வந்தனர்.

இந்நிலையிலேயே 1958 மே 26ம் திகதி ஆரம்பித்த அப்பாவித் தமிழர்களின் மீதான கொடூரத்தாக்குதல் வேளையில் தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன் வெலிமடையிலிருந்து புறப்பட்டு பதுளை வழியாக மட்டக்களப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது மாஓயா என்னும் இடத்தில் சிங்கள இனவெறியரால் படுகொலை செய்யப்பட்டார்.

மலையகத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள வியாபாரி மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் எனப்பரவிய வதந்தியைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது ஆனால் நடந்த கொலை இனரீதியானது அல்ல அது தனிப்பட்டகொலை…. நடந்தது இதுதான்.

“செனிவிரட்ணா” இவர் நுவரெலியாவின் முன்நாள் மேயராவார். இவர் பின்நாட்களில் அரசியலைக் கைவிட்டுவிட்டு மட்டக்களப்பிற்கு வந்துதென்னந்தோட்டமொன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் அங்கிருந்த உள்ளூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அவருக்கு கூடாவொழுக்கம் உரு வாயிற்று இதை அறிந்ததும் அப்பெண்ணின் கணவர் செனிவிரெட்ணாவை 25 மே 1958ல் சுட்டுக்கொன்று விட்டார்.

செனிவிரட்ணாவின் உடலை மட்டக்களப்பில் இருந்து பதுளை வழியாக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லும் வழியில்தான் சிங்களவனை தமிழன் சுட்டுக்கொன்று விட்டான். ஏனப் பிரச்சாரம் பரவியது. இதனைத் தொடர்ந்து பற்றியெரிந்த இனத்தீ தமிழர் களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

அப்பாவித்தமிழ் மக்கள்மீதான கொடூர சிங்கள இனவெறித் தாக்குதலில் குறிப்பாகத் தெனிலங்கை நகரங்களான மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை, இங்கினியாகல, கல்லோயா போன்ற இடங்களும் பதுளை போன்ற மலையக நகரங்களுமே ஆரம் பத்தில் பாதிப்பிற்கு உள்ளாகின.

இவைகளைத் தொடர்ந்து காலி, பாணந்துறை, கொழும்பு என நாடளாவிய ரீதியில் இக்கலவரம் கோரத்தாண்டவம் ஆடியது இங்கு குறிப் பிடத்தக்கது.

1958 வைகாசி மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வாறு செல்லத்துரை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டபோது வெலிமடையில் அவரது மனைவியான ஆசிரியை இராசம்மா 4 பிள்ளைகளுடன் தங்கியிருந்த அவர்களது வீடு சிங்கள இனவெறியினரால் தாக்கி எரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் இருந்து தனது சிறுபிள்ளைகளுடன் தப்பியோடிய திருமதி அன்னப்பாக்கியம் பின்பு எப்படியோ மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையரன இவர் மட்டக்களப்பில் தனது தாயாருடன் இருந்த ஏனைய இரு குழந்தைகளுடன் இணைந்து தாமரைக்கேணியில் வேலுப்பிள்ளை குடும்பம் இருந்த வீட்டிற்குப் பின்புறமாக தமது வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

ஆறு குழந்தைகளுடனும் தனது ஆசிரியத் தொழில்மூலம் கிடைத்தசொற்ப வருவா யில் மிகுந்த பொருளாதார சிக்கலில் வாழ்ந்தபோதும் தனதுஅயலவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ந்து பேணிவந்தார். இதன்மூலம் அயலவர்களும் உறவினர்களும் இவரின் நிலை கண்டு உதவி புரிந்தே வந்தனர்.

மிகவும் சுவாரசியமாகவும் தத்ரூபமாகவும் உரை யாடக்கூடிய இவர் அடிக்கடி நமது மேதகு தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு வந்து தலைவரின் தாயான பார்வதிப்பிள்ளையுடன் உரையாடுவதுடன் அந்நேரங்களிலெல்லாம் சிங்கள இனவெறியால் தனக்கு நேர்ந்த அவலத்தையும் கண்ணீர் மல்கக்கூறி ஆறுதலடைவதும் வழக்கம்.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து தேசியத்தலைவர் பெற்றுக்கொண்ட அருங்கொடையாகும்.

இவ்வாறாக நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடிய வில்லை.

1963இல் மட்டக்களப்பைவிட்டு அவர் வெளியேறிவிட்ட போதும் 1984ல் முதன் முதலாக இந்தியாவின் பிரசித்தமான `SUNDAY` ஆங்கில வார ஏட்டிற்கு பேட்டி ஒன்றை வழங் கியிருந்தார். 1973 மார்ச் 23ம் திகதி அதிகாலை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் இவர் வீட்டைச் சுற்றிவளைத்து இவரைக் கைது செய்ய முயன்றபோது சுவரேறித் தப்பிக் கொண்ட இவருடைய 11 வருட தலைமறைவு வாழ்க்கையின் பின் 11, 17 மார்ச் 1984 அன்று இப்பேட்டி பிரசுரமானது.

பிரபல பெண் பத்திரிகை நிருபரான அனிதா பிரதாப்பின் 46 கேள்விகளுக்கு விரி வாகத் தலைவர் வழங்கிய பதில்கள் மூலம் தமிழீழவிடுதலைப் புலிகளினதும் தன்னைப் பற்றியதுமான பலவிடயங்களை முதன் முதலாகப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தச் செவ்வியின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே தனது உள்ளத்தில் பதிந்திருந்த விதவைத்தாயான இராசம்மாவினை நினைவு கூர்ந்தே அவருடைய பதில் பின்வரு மாறு அமைந்துள்ளமையை நாம்காணலாம்.

கேள்வி : இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டமே ஒரு வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவிற்கு நிர்ப்பந்தித்த அனுபவங்களை சற்றுக் கூறுவீர்களா? கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

பதில் : நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ம் ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் என் மனதில் ஆழமானபாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம்மக்கள் ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத்தாயை நான் ஒரு முறை சந்தித்தபோது (அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை என்னிடம் சொன்னார்.)

இனக்கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் அவர் வீட்டைத்தாக்கினார்கள். அவருடைய வீட்டிற்குத் தீவைத்து அவரது கணவரையும் குரூரமாகக் கொலைசெய்தனர். அவரும் அவருடைய பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரின் உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கொதிக்கும் தாருக்குள் சிறு குழந்தைகளை உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.

அநாதரவான அப்பாவித்தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதை எல்லாம் கேட்கும்போது எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்படுகின்றது. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென பெரும் உந்துதல் எனக்குத் தோன்றியது.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென நான் ஆழமாக உணர்ந்தேன்.

இவ்வாறே அன்று தலைவர் பிரபாகரன் கண்ட மட்டக்களப்புத் தாயின் கண்ணீர்த் துளிகளே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூல ஊற்றாகிஉலகமெல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் ஓயாத அலைகளாக பின்பு உருவெடுத்தன.

– சாணக்கியன்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்தெய்வத்துள் வைக்கப்படும்”

எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.

வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது.

தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

சீர் மிகு செந்தமிழனை தமிழினம் தலைவனாக கொண்டதற்காக அத்தகைய வீரப்புதல்வனின் தாய் தந்தையர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவருடைய துணைவியார் பார்வதி அம்மையாரும் தம் தள்ளாத வயதினிலே சிறிலங்கா அரசின் அரக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கெல்லாம் ஆளாகி சிறைப்படுத்தப்பட்ட நிலையில் காலமாகினார் எனும் செய்தி தமிழினத்தின் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.

தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் பேரழிவுப் படுகொலைக் காலங்களில் இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து கைதாகி உறவினர்களைக் கூட பார்க்கமுடியாத வகையில் தடுத்து சிறை வைக்கப்பட்டு உரிய மருத்துவ பராமரி;ப்புகளின்றி சாவடைந்த இப்பெருமகனின் மரணம் இயற்கையானது என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

தமிழினத்தின் மீதும் தமிழர் தலைவன் மீதும் சிங்கள வெறியர் கொண்டுள்ள வெறித்தனமான கோபத்தின் அடையாளமாகவே இந்த மென்போக்காளரின் அநியாயமான அநீதியான மரணம் சுட்டி நிற்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே துறந்து போராடிய தமிழீழ தேசியத்தலைவர் மீது சிங்கள வெறிகொண்ட அரசு காட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடே தள்ளாத வயதினரான இவ்விணையர்க்கு நேர்ந்திட்ட உச்சக்கட்ட இன்னல்கள் எனலாம். இதனை மனிதம் பேசும் சர்வதேச சமூகங்கள் எவையுமே வழமைபோல் இனியும் தட்டிக்கேட்கப் போவதில்லை என்பதும் நாம் அறிந்ததே.

இப்பெருமகனார் பற்றிய சில எனக்குக் கிடைத்த வாழ்வாதாரத் தகவல்கள் சிலவற்றை இக்கட்டுரையூடாக தர விளைகின்றேன்:

1800 களில் வல்வட்டித்துறை கடலில் சுமார் 87 கப்பல்களோடு வணிக சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவி இந்தியா, பேர்மா ஆகிய நாடுகளோடு வணிகம் நடாத்திய கப்பலோட்டிய தமிழர் பரம்பரையில் உதித்தவரே திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்பது ஊரவர் போற்றும் சிறப்பாக இன்றும் உள்ளது. பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களும் சிங்கள ஆக்கிரமிப்பாளரும் சட்டவிரோதம் என கட்டிப்போட முயன்ற போதும் அடங்காத் தமிழர்களாய் அடக்குமுறைகளுக்கும் தடைகளுக்கும் தளராமல் சுதந்திரமாக கடலில் வணிகம் செய்து கடலோடு மோதி விளையாடும் வீரத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள் இவரது முன்னோராவார்.

சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் ஆளுமையும் வீரமும் மிக்க பரம்பரையில் பிறந்தவர் திரு வேலுப்பிள்ளை அவர்கள் என்பதற்கு உச்சக்கட்ட சான்றாகத் திகழ்பவர்கள்; அவரது மகனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அவரது வழித்தோன்றல்களும் என்பதை உலக வரலாறு நன்கறியும். தரைப்படை கடற்படை வான்படையும் மட்டுமன்றி; புலம்பெயர் தமிழர் படையையும் கட்டி எழுப்பிய முதற் தமிழ்த்தலைவனைத்தந்த பெரியார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் என்றால் மிகையில்லை.

வல்வட்டித்துறையில் ‘இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள்’ எனக் கருதப்படும்; ‘எசமான் பரம்பரையில்’ கோவில் கட்டிய நற்குடி பெருமகனான வேலாயுதத்தின் மகன் திருமேனியார் அவர்களாவார். அவரது மகனான கோவில் கட்டிய பெருமை பெற்ற வெங்கடாசலம் என்னும் பெருமகனார் 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்த அதே ஆண்டில் பிறந்து 1892 இல் மறைந்தவர்.

அவரது மகன் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கும் பெயரான திருவேங்கடம் என்னும் பெயர் கொண்டவர். இவர் மலேசியா சென்று தொடர்வண்டித் திணைக்களத்திள் பணியாற்றிய காலத்தில் பல தமிழீழ தமிழர்களை மலேசியாவுக்கழைத்து வேலை வாய்ப்புகள் எடுத்துக் கொடுத்து உதவினார.; இவர் தனது மகனுக்கு தன் தந்தையின் பெயரான வேலுப்பிள்ளை என்னும் நற்பெயரைச் சூட்டினார்.

மலேசியாவில் திருவேங்கடம் தம்பதியினருக்கு 1924 சனவரி 10 அன்று அருந்தவ மகனாக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். சிறுவயதிலேயே தன் தாயை இழந்திட்ட இவர் தன் தந்தையாருடன் சிறுவயதிலேயே (சுமார் 5 வயதில்) வல்வட்டித்துறைக்கு தாயகம் திரும்பினார்.

இவரது முன்னையோர் கட்டிய வல்வை வைத்தீஸ்வரன் என்னும் சிவன் கோவில் சூழலில் தனது பிள்ளைப் பிராயத்தைக் கழித்த இவர் சிதம்பரா வித்தியாலயத்தில் தனது இளமைக்கல்வியைக் கற்றார்.

மென்மையுள்ளத்தோடும் நேர்மைப் போக்கோடும் வாழ்ந்த இவர் இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகவே வாழ்ந்தார். பொய் பேசாத சட்டவிதி முறைகளுக்கு கட்டுப்பட்ட நேர்த்தியான வாழ்வை கட்டுப்பாட்டோடு கடைப்பிடித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலராக (DLO- District Land Officer) முல்லைத்தீவு, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அரச கடமையாற்றினார். தமிழ்ப்பாண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த இவர் நேர்மையின் சிகரம் எனப் போற்றப்பட்டார்.

மரபுவழிச்சிந்தனையோடு அரசபணி பொறுப்பேற்று அரசிற்கு விசுவாசமான அரச ஊழியராகவே காலம் முழுவதும் வாழ்ந்த இவருக்கு சிங்கள அரசு புகட்டிய பாடம் என்ன? நேர்மையும் உண்மையும் அகிம்சையும் போற்றினாலும் தமிழர்க்கு இலங்கைத்தீவில் நிம்மதியான நீதியான வாழ்வு என்றுமே இல்லை என்பதே இலங்கை அரசு இவர் போன்ற அப்பாவித் தமிழர்களுக்கு புகட்டுகின்ற பாடமாகும்.

இவரது தன்னடக்கமான சுபாவத்திற்கு சான்றாக இவரது முன்னோர் கட்டிய ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் தலைமைப் பொறுப்பேற்க இவரை கோரியபோது மறுத்த நிகழ்வைக் கூறமுடியும். பின்னாளில் ஓய்வு பெற்றபின் சிலகாலம் ஆலயநிர்வாகப்பணியை ஏற்று நடாத்தினார்.

1946 ஆம் ஆண்டு பார்வதி அம்மையாரை கைப்பிடித்த இப்பெருமகனார் அம்மையாருடன் ஈருடல் ஓருயிர் என மனமொத்து இல்லறவாழ்வின் இலக்கணமாக இறுதிவரை வாழந்தவர் என்பது உலகறிந்த உண்மை.இவ்விணையர் ஆற்றிய இனிய இல்லறத்தின் அரும்பயனாக 1948 இல் இவர்களுக்கு மனோகரன் என்னும் அருமை மகனும் அவரைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி, என்னும் அருமை மகள்களும் நான்காவதாக பிரபாகரன் என்னும் செல்ல மகனும் மகவுகளாக வந்துதித்தனர்.

வேலுப்பிள்ளை ஜயா அவர்கள் தன் செல்ல மகனாம் பிரபாகரன் மீது கொண்டிருந்த பாசத்தின் அடையாளமாக அவர் மதிக்கும் தமிழின உணர்வாளர் திரு. வை.கோ. அவர்களின் பேரனுக்கு ‘பிரபாகரன்’ என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததிலிருந்து காணலாம்.

இப் பெருமகனார் அரசியல் வாடையையே விரும்பாதவர். எத்தகைய வாக்களிப்புகளிலும் வாக்களிக்கச் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயல்பாகவே வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இப்பெருமகனார் தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களோடு சரித்திரம் பற்றி அளவளாவ விருப்புடையவராக திகழ்ந்தார். எனினும் அரச விதிகளை மீறுவதை அவர் சரியெனக் கொள்ளவில்லை.

ஆனால் அவரது செல்வப் புதல்வனான தமிழீழ தேசியத் தலைவரோ தமிழினம் சிங்கள ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டு அல்லல்பட்டு மடிவதை விரும்பவில்லை. கடந்த கால வரலாற்றில் அகிம்சை வழி கற்றுத்தந்த கசப்பான பாடங்களில் பயனேதும் இல்லை என்பதைக் கண்ட பெருந்தலைவர் அநீதியைத் தடுத்து நிறுத்த ஆயுதப் போராட்டமே ஒரே வழியென உணர்ந்து குடும்பத்தைப் பிரிந்து நீதிக்கான போராட்டப் பாதையை தனதாக்கிப் புறப்பட்டார்.

சமூகத்தலைவர்கள் வம்சத்தில் உதித்திட்டதனால் அவருள் மிகுந்திருந்த ஆளுமையானது அவரை ஒரு இனத்தின் தேசியத் தலைவராக்கியது. வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வனார் ஈழத்தமிழினத்தினது மட்டுமன்றி உலகத்தமிழினத்தினதும் அருந்தவச்சேயாக காலங்காலமாக தாயவர் நோற்றிட்ட தவப்பயனாக வந்துதித்த அவதாரத் தெய்வவடிவாக பல்லாயிரம் வரலாறுகள் படைத்திட்ட சரிதங்கள் தனியானவை. அவற்றை விரிக்கின் பெருகும் என அஞ்சுகிறேன்.

தமிழினத்தினைக் காக்க தலைவர் புறப்பட்டதைக் காரணமாக்கி, காரணமின்றி அவரது பெற்றோர்கள் பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். குறிப்பாக துரையப்பா மறைவின் பின் தன் மகனைத் தேடி வரும் சிறிலங்கா காவலரிடம் தந்தையார் சொல்லும் பதில் “நானும் என் மகனைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடித்தால் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்பதாகும்.;

அரச படையின் சித்திரவதை தாங்காமலும் அயலவர்களுக்கு தம்;மால் சிக்கலிருக்கக் கூடாது எனக் கருதியும் 1983 காலப்பகுதியில் பொலிகண்டியில் ‘கந்தவனக் கடவை’ கோவில் மண்டபத்தில் சிலகாலம் வாழ்ந்த வேலுப்பிள்ளை அவர்களும் பார்வதி அம்மையார் அவர்களும் பின் அங்கும் வாழ முடியாத சூழலில் இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் எம். ஜி. ஆர். உட்பட்ட பல தமிழின உணர்வாளர்களுடன் உறவு கொண்டு அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்ந்திருந்தனர்.

அக்காலத்தில் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிறிது சுகயீனமுற்ற போதும் விரைவில் அவர் தேறினார். ஆனால் பார்வதி அம்மையார் பாரிச வாதத்தால் தாக்குண்டு ஒரு காலும் ஒரு கையும் செயலிழந்து அவதியுற்ற நிலையில் அவரை தாய்க்குத் தாயாக உற்ற துணையாக அரவணைத்து பராமரித்த பெருமை திருவாளர் வேலுப்பிள்ளை அவர்களைச் சாரும். அத்தோடு தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒரு குடும்ப மருத்துவர் அவர்களை தன் பெற்ற தாய் தந்தையருக்கு ஒப்பாக மதித்து பேணிக்காத்தமையை நாம் நன்றியுணர்வோடு நவில விரும்புகின்றோம்.

இலங்கையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் 2002 இன் பின் “இனியேனும் தாயகத்தில் அமைதியாக வாழ முடியும்” என்ற நம்பிக்கையோடு தமிழீழம் திரும்பிய இவ்விணையர்கள் வன்னியில் தமது இறுதிக்காலத்தை கழித்தனர். சில காலமேனும் சுதந்திரத் தமிழீழத்தில் இனிதாக வாழ்ந்த பெருமை இவர்களுக்கு உண்டு.

பெருந்தலைவரின் தந்தையார் என்ற எந்த சலுகைகளும் இன்றி மக்களோடு மக்களாக எளிமையாக கிளிநொச்சியில் தனிக்குடித்தனம் ஆற்றிய இப்பெருமகனார் கொள்கைப்பற்றாளராக இறுதிவரை வாழ்ந்தார என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். பார்வதி அம்மையாரும் இவரும் கூடி வாழ்ந்த அழகான வாழ்வு அழகான கவிதைக்கு ஒப்பானது. இணைபிரியாத அன்றில்கள் போல் வாழ்ந்த இவர்களுக்கு சொந்த மண் கொடுத்த சுகம் தனியானது. பிரிந்து வாழ்ந்த மகவோடு இணைந்து உறவாடும் இன்பம் தந்தது.

அந்த இனிய காலம் நீடிக்கவில்லை. இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மாபெரும் தமிழின அழிப்பை கோரத்தனமாக செய்து முடித்த கொலை பாதக சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றது.

மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் கடந்த 18-05-2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்களுடன் சேர்ந்து ஓமந்தைப் பகுதிக்குச் சென்றபோது ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு பனாகொடை தலைமை முகாமில் கடந்த 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்விஇ தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டுஇ எவ்வளவோ முயற்சித்தும்இ சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

இந் நிலையில் 6-01-2010 அன்று தனது 86வது அகவையில்; வேலுப்பிள்ளை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசலையில் இறந்துவிட்டதாக அரசாங்கம் காலம் தாழ்த்தி அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவ வசதிகள் இன்றியும் உணவு இன்றியும் முகாம்களுக்குள் சாகடிக்கப்பட்டார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

திரு வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் போராளிகளல்ல. முதுமையிலும் இயலாமையிலும் தள்ளாடும் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தியது எவ்விதத்தில் நியாயம்?. பக்கவாத நோயால் பாதிப்புற்ற துணைவியாரைப் பராமரிக்க ஏற்ற வசதிகளின்றி மருந்து வசதிகளின்றி தம் உறவுகளோடோ பிள்ளைகளோடோ தொடர்பு கொள்ளவிடாமல் 8 மாதங்கள் சிறை வைத்து உடலாலும் உள்ளத்தாலும் சொல்லொணாச் சித்திரவதைகளை சிங்கள அரசு இம்முதியவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் இப்பெருமகனைக் கொன்றும் விட்டது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும். உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை தடைகளேதுமின்றி சிங்கள அரசு செய்து கொண்டிருக்கையில் இனியும் தட்டிக் கேட்காது போகுமா அனைத்துலக நாடுகள்? உலகை உலுப்பிக் கேட்க உலகத்தமிழினம் கிளர்ந்தெழ வேண்டும்.

இரக்கம் இல்லா அரக்கராக சிங்கள அரசு வெறியாட்டம் ஆடுவதற்கு மற்றுமொரு சாட்சியமாக மண்டியிடா வீரராகவே வீரச்சாவெய்திவிட்டார் எம் தலைவனை தரணிக்குத் தந்த இந்த மாதந்தை. அவரைப்பிரிந்து அரக்கர்கள் மத்தியில் எங்ஙனம் தன் உயிரைக் காப்பரோ பார்வதி அம்மையார் என எண்ணுகையில் நெஞ்சம் நடுங்கிக் கலங்குகின்றது. அருகிருந்து ஆறுதல் கூற கோடானு கோடி தமிழுறவுகள் உலகெங்கும் காத்திருக்க எங்கள் அன்னை அநாதரவாக எத்தகைய துன்பங்களுக்கெல்லாம் அரக்கர் குகைக்குள் உள்ளாகி துடி துடிக்கின்றாரோ என எண்ணும் எண்ணத்திலேயே செத்துக் கொண்டிருக்கிறது தமிழினம். அடிப்படை மனித உரிமை விதிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு மனிதநேயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இம்மாதந்தையின் உயிர் பிரிந்துள்ளது. சிங்கள அரசின் இக்கொடும் பாதகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்க மாட்டாது.

ஈழத்தமிழினத்தின் சொல்லொணாச் சோக சரிதங்களுள் ஒன்றாக இப்பெருமகனின் சாவும் அமைந்து விட்டது. எனினும் அவரது நித்திய உறக்கம் நீதிக்காக எழுந்து போராட உலகத் தமிழினத்தை தட்டி எழுப்பியுள்ளது என்பது உறுதி. உலகத்தமிழினத்தின் அன்புத் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் வரலாற்றில் “மாதந்தையாக” நிரந்தரமாக நிலைத்து வாழ்வார். அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லும் உலகத்தமிழினமாகிய நாம் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற மீண்டு எழுவோமாக.

நீதி செத்துவிட்டதாக கொட்டமடிக்கும் கயவர் கொட்டமடக்கி நீதி வெல்ல உழைத்திடுவோம். தமிழினத்தின் சோகம் துடைத்து தமிழீழம் வென்றெடுக்கும் பணி தொடர்வோமாக.

– சிவவதனி பிரபாகரன்

முந்தைய செய்திபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அழுகி வருகிறது – மீண்டும் விலை உயர்வு
அடுத்த செய்திவீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று – தலைமை அலுவலகம் அறிவிப்பு