தனியார் பள்ளிகள் நடப்பாண்டு முதல் வசூலிக்க வேண்டியது என அரசு நிர்ணயித்த புதிய கட்டணத்திற்கு நீதிபதி வாசுகி விதித்த இடைக்கால தடையை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் மறு ஆய்வு மனுக்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பள்ளிக் கல்வி கட்டணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜனின் பதவி விலகலைத் தொடர்ந்து தற்போது நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரணை செய்து வருவதால் மறு ஆய்வு மனுக்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.