உலக புத்தக நாள்! – சீமான் வாழ்த்து!

9

சுவாசிப்பது போல வாசிக்க தொடங்க வேண்டும்!

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்றார் நம்முடைய பாட்டன் வள்ளுவப் பெருமகனார்!

அறிவைத்தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலைத்தேடி ஓடி வரும் என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்;

அறிவு என்பது நம் அறியாமை எவ்வளவு என்பதை அளந்துகாட்டும் கருவி என்கிறார் தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

ஒவ்வொரு புத்தகமும் விதை நெல் என்கிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்!

போர்க்களத்தில் துப்பாக்கிகளைவிட புத்தகங்களே சிறந்த ஆயுதங்கள் என்கிறார் புரட்சியாளர் லெனின்!

ஒரு மனிதன் தம் வாழ்நாளில் 10000 மைல்களாவது பயணித்திருக்க வேண்டும்; 10000 நூல்களாவது படித்திருக்க வேண்டும் என்கிறது சீனப்பழமொழி!

முகத்தைச் சீர் செய்ய கண்ணாடி; அகத்தைச் சீர் செய்ய புத்தகம்!

மரத்தை அளக்க பயன்படுவது நூல்; அதைப்போல மனிதர்களின் மனத்தை அளக்க உதவுவது நாம் படிக்கும் நூல்!

தலைகுனிந்து படித்தவர்கள் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்!

மக்களாட்சி முறைமையில் அதிகாரத்தை அடைய ஒரே வாய்ப்பு தேர்தல்!
அந்த தேர்தலில் வெல்வதற்கு ஒரே வாய்ப்பு மக்கள் மனங்களை வெல்வது!

மக்களின் மனங்களை நம்முடைய தர்க்கத்தினாலேயே வெல்ல முடியும்!
நாம் தர்க்கவாதத்தில் தலைசிறந்தவராக கருத்தியல் தெளிவடைய வேண்டும்!

கருத்தியல் தெளிவடைய வேண்டுமென்றால் அறிவை விரிவாக்க வேண்டும்;
அறிவை விரிவாக்க நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி நாள்தோறும் படிக்க வேண்டும்!

ஆக, எப்படி பார்த்தாலும் வாசிக்கத் தொடங்கிவிட்டாலே நாம் வெல்ல தொடங்கிவிட்டோம் என்று பொருள்!

எனவே, என்னரும் தம்பி தங்கைகள் அனைவரும் சுவாசிப்பது போல வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்! அதுதான் உலகத்தின் உயரத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்! முன்னை விட இன்னும் வீரியமாக, ஆழமாக நூல்களை வாசிக்க இன்றைய நாள் முதல் தொடங்குவோம் என உறுதியேற்போம்!

புத்தகம் என்பது தொட்டுப்பார்த்தால் வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!

https://x.com/Seeman4TN/status/1914989286015008884

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி25 Innocent Civilians Shot Dead in Kashmir: This Terrorist Attack Exposes the BJP Govt’s Security Lapse!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்