கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

19

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகள் மற்றும் சிறு கடைகள் அமைத்து, அவற்றையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு உதவிடும் நோக்கத்துடன், கருணை அடிப்படையில் மிகக்குறைந்த தொகையில் அறநிலையத்துறையின் சார்பாக கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அக்கடைகள் மூலம் அன்றாடம் வியாபாரம் நடத்திக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்ந்துவரும் மக்களிடம், தற்போதைய திமுக அரசு இலட்சக்கணக்கில் வரி கட்டச்சொல்லி மிரட்டுவதும், கடைகளை பூட்டி முத்திரை வைப்பதும் பெருங்கொடுமையாகும்.

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்து, இன்பம்காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.

ஆகவே, தமிழ்நாடு அரசு கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையைத் திரும்பப்பெற்று, குறைந்த கட்டணம் வசூலிக்கும் பழைய அரசாணையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1882380895274889319

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்பட்டது: தானேழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திவட இந்தியா சென்ற தமிழ்நாடு கபடி வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல்: வேடிக்கை பார்ப்பதுதான் திமுக அரசின் வாடிக்கையா? –