வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

116

வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பழைய மற்றும் புதிய வாடகை வாகனங்களுக்கு உடனடியாக ஆயுட்கால வரி செலுத்த வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி (10.11.23) அன்று திமுக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் வாடகை வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் பெரும் அதிர்ச்சிக்கும், மிகுந்த மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது வேதனையளிக்கிறது.

ஏற்கனவே காலாண்டு வரி செலுத்தி வந்த ஐந்தாண்டு, பத்தாண்டு முடிந்த பழைய வாடகை வாகனங்களும், தொடக்கத்தில் வாகனத்தை வாங்கிய அதே தொகைக்கு ஆயுட்கால வரியைச் செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவு சிறிதும் மனச்சான்றற்ற
பகற்கொள்ளையாகும். 10 ஆண்டுகள் கடந்த வாகனங்களை தற்போதையச் சூழலில் விற்பனை செய்தால் கூட 2,00,000 ரூபாய்க்கு மேல் விற்க முடியாத நிலையில், அவற்றுக்கு 14.5% என்ற அளவில் ஏறத்தாழ 2,15,000 ரூபாய் அளவிற்கு வரி செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவு எவ்வகையில் நியாயமாகும்?

வாகன எரிபொருள் விலை உயர்வு, சாலை வரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு, வாகன தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு, (vehicle fitness certificate – FC), இணையவழி தண்டம், வாகன உதிரிப் பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மிகுந்த நட்டத்திற்கு ஆளாகி தொழிலை நடத்த முடியாத அளவிற்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களையும், உரிமையாளர்களையும் லட்சக்கணக்கில் ஆயுட்கால வரி செலுத்த வேண்டும் என்று திமுக அரசு கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையாகும்.

கொரானோ ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கான தவணைத்தொகையை (EMl) கூடச் செலுத்த முடியாத அளவிற்கு தொழில் முடக்கத்தால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வாடகை வாகன ஓட்டுநர்கள் தற்போதுதான் மெல்ல மீண்டுவரும் நிலையில், மீண்டும் ஆயுட்கால வரி என்ற பெயரில் கசக்கிப் பிழிவதென்பது அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சீரழிக்கவே வழிவகுக்கும். திமுக அரசின் இப்புதிய உத்தரவால் கடன் முறையில் வாகனம் வாங்கி இயக்கி வரும் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்னர். இது குறித்து முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், போக்குவரத்து ஆணையர், அதிகாரிகள் வரை பலமுறை மன அளித்தும் அரசு அவர்களின் கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பெருங்கொடுமையாகும்.

ஆகவே, வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் துயரநிலையை கருத்திற்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் ஆயுட்கால வரி முறையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று பழைய காலாண்டு வரி விதிப்பு முறையே தொடர உடனடியாக உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சுற்றுலா வாடகை வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பு (TTTOF) முன்னெடுக்கும் காத்திருப்பு போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவினை வழங்கி கோரிக்கை வெல்ல துணைநிற்கும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திவடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்