விசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

214

விசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த 26 வயதேயான தம்பி தங்கசாமியின் மரணத்திற்கு நீதிகேட்டும், உடலை வாங்க மறுத்தும் அவரது குடும்பத்தினர் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் நிலையில், திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலங்கடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து வருவது அரச பயங்கரவாதத்தின் உச்சமாகும்.

தம்பி தங்கசாமி எத்தகைய கடுமையான குற்றம் புரிந்திருந்தாலும் சட்டப்படி, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டணையைப் பெற்று தந்திருக்க வேண்டும். அதனைவிடுத்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரே அடித்துக் கொன்றிருப்பது கொடுங்கோன்மையாகும்.

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் அத்துமீறிய கைதிற்கு எதிராக கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் திமுக அரசு, தம்பி தங்கசாமியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?

மதுபானம் விற்றதற்காக கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்றால், மதுபானத்தை நாள்தோறும் மொத்தமாக விற்கும் தமிழ்நாடு அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது? உடற்கூராய்வில் தம்பி தங்கசாமி உடலில் காயங்கள் இருந்துள்ளதும், கடுமையாக தாக்கப்பபட்டு உயிரிழந்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய காவலர்கள் மீது திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்து அமைதி காப்பது ஏன்?

தமிழ்நாடு காவல்துறை ஆணையர் அவர்கள் கைதிகளிடம் இரவு நேரத்தில் விசாரணை மேற்கொள்ள கூடாதென்று உத்தரவிட்ட பிறகும், விசாரணை மரணங்களைக் குறைக்க வேண்டும் என்று முதலமைச்சரே நேரடியாக அறிவுறுத்திய பிறகும், காவல்நிலைய மரணங்கள் தொடர்வது காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை விசாரணையின்போது, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணத்திற்கு நீதிகேட்டு குரல்கொடுத்த முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமது இரண்டான்டு ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள 20-க்கும் மேற்பட்ட சிறை மரணங்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்ப்பது ஏன்? அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக திருவல்லிக்கேணி விக்னேசு, முதுகுளத்தூர் மணிகண்டன், விக்கிரமங்கலம் விவசாயி செம்புலிங்கம், செங்கல்பட்டு சிறுவன் கோகுல்ஸ்ரீ, திருவண்ணாமலை பழங்குடி தங்கமணி, அருப்புக்கோட்டை தம்பி தங்கபாண்டியன் தற்போது புளியங்குடி தங்கசாமி என்று இன்னும் எத்தனை பேரின் பச்சைப்படுகொலைக்கு திமுக அரசு துணைநிற்கப்போகிறது?

அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் பேசிவிட்டு, காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்திய காவலர்களைக் காப்பாற்ற முனைவது எவ்வகையில் நியாயமாகும்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் *ஆட்சியா*? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, திமுக அரசு இனியும் காலங்கடத்தாமல் தம்பி புளியங்குடி தங்கசாமியின் படுகொலைக்கு காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கினைப் பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

மேலும், தம்பி தங்கசாமியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக 50 இலட்ச ரூபாய் வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்