புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

487

புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டியிலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது கவனக்குறைவால் அருகில் இருந்த குடியிருப்பில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அச்சிறுவன் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். சிறு வயது பிள்ளையைப் பறிகொடுத்து பரிதவிக்கும் பெற்றோருக்கு எனது ஆறுதலை தெரிவித்து அவர்களது ஆற்ற முடியா துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கிராம மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் மிகவும் பாதுகாப்பில்லாத வகையில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டுமென்றும், இனி இதுபோன்ற துயரநிகழ்வுகள் வேறெங்கும் நிகழா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்றும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கி துயர் போக்கவேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி பொது கலந்தாய்வு
அடுத்த செய்திமன்னார்குடி தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு