கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

303

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற
போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள  சென்னை மாநகரில் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைப்புப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின்போதும் தன்னார்வலர்களாக முதலில் களத்தில் இறங்கி உதவி புரியும் நாம் தமிழர் தம்பிகள் தற்போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், அன்பு தம்பி தங்கைகள் முதலில் தங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டு, மிக கவனமாக மக்கள் சேவையாற்ற வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதமிழர் எழுச்சி நாள் விழா களப்பணிகள் குறித்த திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு – தலைமையகம்