மகளிர் குழுக்களைக் கலைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்-நாம் தமிழர் கட்சி

15

மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வங்கிக் கணக்குத் துவக்கும் ஜன் தன் திட்டம் தனிநபரை நோக்கி இருப்பதால், அவர்களின் பொருளாதாரம் மேம்படும் என்கிற நிலையில், சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படலாம் என அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. விலங்குகளின் நலன்காப்பதில் கூட அளப்பரிய அன்பும் ஆர்வமும் காட்டும் அம்மையார் மேனகா காந்தி அவர்கள் மகளிர் நலன்காக்கத் தவறிவிட்டதாகவே கருதத் தோன்றுகிறது. அடித்தட்டு ஏழைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், விவசாயக் கூலிப் பெண்கள் எனப் பலருக்கும் பேருதவியாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைக்க நினைத்த யோசனையே மிகத் தவறானது. ஒரு குழுவாக இயங்கி தங்களின் இக்கட்டுகளையும் நெருக்கடிகளையும் தீர்க்கும் விதமாகக் கடனுதவி பெற்று கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைவதற்கு காரணமாக இருப்பவையே சுய உதவிக் குழுக்கள்தான். பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் பலன் தனிநபரையே நோக்கிச் செல்வதால் குழுக்கள் தேவையில்லை என நினைப்பது மத்திய அரசின் புரிதலற்ற போக்கையே காட்டுகிறது. குழுவாகவும் கூட்டமைப்பாகவும் மக்கள் ஒன்றுபட்டு வளர வேண்டும் என நினைப்பதுதான் உயரிய சிந்தனையாக இருக்க முடியும். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்… இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்’ எனப் பாட்டுப்பாடி மக்கள் மனதில் ஒற்றுமையையும் குழு மனப்பான்மையையும் உண்டாக்கிய மனிதர்கள் வாழ்ந்த மண் இது. பகிரும் துன்பம் பாதியாகும் என்கிற புரிதல்கூட இல்லாமல், தனிநபருக்கே அரசின் திட்டம் செல்வதால் குழுக்களைக் கலைக்க நினைக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இப்படிச் சொல்பவர்கள் தங்களின் பாரதீய ஜனதா கட்சியைக் கலைத்துவிட்டு தனித்தனி தலைவர்களாகவே இயங்கலாமே… ஏற்கெனவே பலப் புரிதலற்ற, தெளிவற்ற அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் விளக்கம் கொடுப்பதுமாக இருக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு சுய உதவிக் குழுக்களைக் கலைக்கும் யோசனையை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், கோடிக்கணக்கான பெண்களின் அடித்தட்டு வாழ்வையும் மேம்பாட்டையும் அழித்த பாவத்துக்கு மத்திய அரசு ஆளாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திமணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
அடுத்த செய்திவிகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு. -சீமான் இரங்கல்