புதுடில்லியில் நாளை சல்மான் குர்ஷித்தை சந்திக்கிறார் பீரிஸ்

18

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை புதுடில்லியில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். புதுடில்லியில் நாளை பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்து சமுத்திர வலய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் குர்ஷித் அவுஸ்திரேலியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பெருந்தொகையான நாடுகளின் பிரதிநிதிகளுடன் அடுத்த இரு தினங்களில் இரு தரப்பு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை சீசெல்ஸ் வெளிநாட்டமைச்சர் ஜீன்போல் அடம் மற்றும் அவுஸ்திரேலிய வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தைச் சேர்ந்த பாராளுமன்ற செயலாளர் ரிச்சாட் மார்லிஸ் ஆகியோரைச் சந்திக்கவுள்ள குர்ஷித் அவர்களிருவரும் பெருமளவிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் ஓமான் வெளிநாட்டமைச்சர் யூசுப் அலவியுடனும் அவர் பரஸ்பர நலன் குறித்த பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

குர்காஓனில் நாளை ஆரம்பமாகவுள்ள 19 உறுப்பு நாடுகள் கலந்து கொள்ளும் மேற்படி மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளை, மீன்பிடி முகாமைத்துவம் அனர்த்த அபாயம் ஏற்படக்கூடிய நிலைமையைக் குறைத்தல், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார பரிமாற்றங்கள், கல்விசார் மற்றும் விஞ்ஞான தொழில் நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் ஆகிய முன்னுரிமைபெற்ற ஆறு விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைள் எடுப்பதன் மூலம் சங்கத்தைப் பலப்படுத்தும் பொருட்டு நெருங்கிய நிலையில் பணியாளர் பணியாற்றுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஇராணுவ தளபாட கொள்வனவு மோசடி: இலங்கைக்கு 14வது இடம்
அடுத்த செய்திகூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட மிகவும் வலிமையானது – கே.பி.