நவநீதம் பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது

37

 நவநீதம் பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது:

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. 

ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம் இப்படிப்பட்ட பெளத்த சிங்கள இனவெறி சக்திகள்தான் அதற்கு எதிரான போராட்டத்தையும் வன்முறையையும் கட்டவி்ழ்த்து வந்துள்ளன என்பதே இலங்கையின் அரசியல் வரலாறாகும். இப்போது இப்படிப்பட்ட போராட்டத்தை புத்த பிக்குகள் நடத்துவதற்குக் காரணம், நவி பிள்ளையின் பயணம் இவர்கள் இதுவரை சர்வதேசத்திற்கு காட்டாமல் மறைத்துவரும் தமிழின அழித்தல் இரகசியங்கள் எங்கே வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சமே. 

இலங்கையை பொறுத்தவரை இப்படிப்பட்ட பெளத்த சிங்கள இனவெறி சக்திகளே அந்நாட்டு அரசியலின் போக்கை நிர்ணயிக்கின்றன என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையரும், தலைசிறந்த மனித உரிமை சட்ட நிபுணருமான நவி பிள்ளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நவி பிள்ளை அவர்களை திசை திருப்பும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள படைகள் இருந்த முகாம்கள் காலி செய்யப்பட்டு, அங்கு மக்கள் குடியேற வழி செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அந்நாட்டு நாளேடுகளில் வெளியாகியுள்ளது. இது அப்பட்டமான பொயப் பரைப்புரையாகும். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் எனுமிடத்தில் குடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றி அங்கு ஒரு மிகப் பெரிய இராணுவ முகாமை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள இராணுவம், அதனை மறைக்க இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நவி பிள்ளை, வலிகாமம் பகுதிக்குச் சென்றால், தமிழ் மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி தமிழ் மக்கள் ஏராளமான தகவல்களைத் தருவார்கள்.

மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிறிய இராணுவ முகாம்களை மூட வேண்டும் என்று இலங்கை அதிபர் அமைத்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடும் ஆணையம் கொடுத்த கண் துடைப்பு பரிந்துரைகளைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை எனும் உண்மையை நவி பிள்ளை கண்கூடாகக் காணலாம். 

இறுதி கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களில் நவி பிள்ளை அவர்கள் நேரில் சென்று மக்களை சந்திப்பார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலாக உள்ளது. தங்கள் குடும்பத் தலைவரையும், இளம் பிள்ளைகளையும் பெற்ற குழந்தைகளையும் சிங்கள பெளத்த இனவெறி இராணவத்தின் கொடுமைகளுக்கு பலிகொடுத்துவிட்டு நிற்கும் அப்பகுதி மக்கள் கூறப்போகும் உண்மைகளே, அங்கு தமிழினம் திட்டமிட்டு இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதையும், தமிழர் நகரங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருப்பதையும் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
 
போருக்குப் பிறகும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் ஒரு திட்டமிடப்பட்ட இன அழித்தல் தொடருவதை உறுதிசெய்யும் சான்றுகள் பலவும் கிட்டும். அதனடிப்படையில் நவி பிள்ளை அவர்கள் கொடுக்கப்போகுத் அறிக்கையே உலகத் தமிழினம் எதிர்பார்க்கும் இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு வழிகோலும். எனவே உலகத் தமிழினம் நவி பிள்ளை அவர்களின் பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகிறது. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திசெங்கொடி_நினைவேந்தல் 28-8-2013