ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி இரங்கல்
தினந்தந்தி நாளிதழின் அதிபரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் ஒரு தேர்ந்த நிர்வாகியாகவும், வழிகாட்டியாகவும, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளித்து அவர்களின் திறனை சர்வதேச அளவில் பிரகாசிக்கச் செய்த பெருந்தமிழர், தமிழினத்தின் பெருமைக்குரிய மனிதர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் மறைவுற்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழினத்தின் பெருமைமிக்க பெருமகனாகத் திகந்த அவருக்கு தனது புகழ் வணக்கத்தையும் உரித்தாக்குகிறது.
பத்திரிக்கைத் துறையோடு நின்றுவிடாமல், விளையாட்டிலும், கல்வியிலும் சிவந்தியார் காட்டிய ஈடுபாடு நிகரற்றதாகும். இந்திய அளவில் பேசப்படும் தலைசிறந்த விளையாட்டுத் துறை நிர்வாகியாக, கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரராக இறுதிவரை புகழோடு நின்றவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சிவந்தியார் இருந்த காலத்தில் எவ்வித சர்ச்சையுமின்றி அச்சங்கம் விளங்கியதுடன், பல நூற்றுக்கணக்கான வீரர்கள் சர்வதேச வாய்ப்புகளை பெற்று பிரகாசித்தனர்.
இப்படி பன்முகத் திறனுடன் வாழ்ந்து, தனது தந்தைக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்த பெருமகன் பா.சிவந்தி ஆதித்தனாரின் மறைவினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை நாம் தமிழர் கட்சியும் பகிர்ந்துகொள்கிறது. அவர் விட்டுச் சென்றுள்ள பொறுப்பு மிக அதிகமானதாகும். அவருடைய இடத்தை இட்டு நிரப்பு ஆற்றல் வாய்ந்த மகனை அவர் விட்டுச் சென்றுள்ளார் என்பது ஆறுதலான விடயமாகும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்