காவிரியில் நமக்கு நீரை மறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரத்தை மறுக்க வேண்டும்: செந்தமிழன் சீமான்

57

வந்தவாசி நகரில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சி இல்லாததே காரணம் என்று கூறினார்.
கச்சத் தீவு எங்கள் பாட்டன் சேதுபதி அரசுக்கு சொந்தமானது, ஆனால் அதனை தமிழனைக் கேட்காமல் தூக்கி இலங்கைக்கு கொடுக்கிறது இந்திய அரசு. இதனை தட்டிக்கேட்டால் பிரிவினைவாதம் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாகவும் கூறி சிறையில் அடைக்கிறது. இலங்கையுடன் நட்பை வளர்த்துக்கொள்ள கச்சத்தீவை தூக்கி இலங்கைக்குக் கொடுப்பதை எதிர்க்கும் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என்று காங்கிரஸ்காரர்கள் குற்றம்சாற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் ஆகியன ஆட்சியில் இருந்தாலும், அவைகள் அந்த மாநில உரிமைகளைக்காகவும், அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை மதிக்கும் மாநிலக் கட்சிகளாகவே ஆட்சி செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன, ஆனால் இவைகள் தேச ஒற்றுமையைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டும் காணாதவை போல நடந்துகொள்கின்றன. அதுதான் முல்லைப் பெரியாற்றில் இருந்து காவிரி வரையிலான நதி நீர்ப் பிரச்சனைகளுக்கும், கச்சத் தீவு பறிபோனதற்கும் காரணமாகும்.

இலங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள இனவெறி ராஜபக்ச அரசு படுகொலை செய்ததை தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம், தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததே காரணமாகும். மதத்தாலும், சாதிகளாலும் பிளவுண்டு கிடந்த காரணத்தினாலும், நம்மை ஆண்ட கட்சி தமிழின உணர்வற்று, டெல்லியின் அடிமையாக இருந்த காரணத்தினாலும்தான் இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதாகும். தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், தமிழினத்தின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலர வேண்டும். சாதி, மத பேதங்களை கைகழுவிட்டு, மொத்தத் தமிழரும் சேர்ந்து ஒற்றைத் தமிழரை ஆதரித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி சாத்தியம்.

முந்தைய செய்திவந்தவாசி பொதுக்கூட்டம் 23-07-2012
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் 15.07.2012 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய வீதி பிரச்சாரம் – நிழற்படங்கள் இணைப்பு!!