சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் – – செந்தமிழன் சீமான்

70

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.


ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

* மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்ஷே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது” என்று கூறியுள்ளார். இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள்.

எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

* தூத்துக்குடி – கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது. இதற்காக முதல்வரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

* கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

* தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம்.

* உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பேசுகையில், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்னைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர்.

தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்னை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.

ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸார் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸார் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா?

இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.

காங்கிரஸின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸுக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கக்கூடாது,” என்றார் மேலும் சட்டசபையில் தீர்மானம நிறைவேற்றிய ஜெயலலிதா அமையாருக்கு நன்றி தெரிவிப்பதோடு நிறுத்தி விடாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார் சீமான்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் புரட்சி தமிழன் சத்யராஜ், இனமான இயக்குனர் மணிவண்ணன்,தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் கலைக்கோட்டுதயம், அற்புதம் அம்மாள், பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசு, தென் சென்னை மாவட்ட ஒருங்கினைப்பாளர் தங்கராசு ஆர்.கே.செல்வமணி, செல்வபாரதி, அமுத நம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஅமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
அடுத்த செய்திதனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்