ஐ.நா நினைத்திருந்தால் இறுதிகட்ட போரின்போது பொதுமக்கள் மரணத்தை தடுத்திருக்கலாம் – ஐ.நா முன்னாள் பேச்சாளர்.

21

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐ.நா. தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெருமளவிலான பொதுமக்கள் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர் குழு கண்டறிந்துள்ளதாகவும் கோர்டன் வைஸ் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் கூறினார்.
பொதுமக்களின் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை ஐ.நா. எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா அறிந்திருந்தது


விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்தார்.போர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்த வலயத்துக்குள்ளிருந்தும் இந்தியாவுக்கு பலமான புலனாய்வு வசதிகள் இருந்துள்ளன என்பதும் கோர்டன் வைஸின் கருத்து.விடுதலைப் புலிகளின் எஞ்சியிருந்த தலைவர்களை சரணடையுமாறு இலங்கை அரசாங்கத்திடமிருந்து தூண்டுதல் இருந்தது
இதேவேளை, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர் எனவும் கூறும் ஐ.நாவின் கொழும்புத் தலைமையக முன்னாள் பேச்சாளர், அவர்கள் பின்னர் கொல்லப்பட்டுவிட்டதாக குற்றஞ் சாட்டப்படுவதாகவும் பிபிசியிடம் கூறினார்.ஐ.நா. வின் அதிகாரி விஜய் நம்பியார் புலிகளின் தலைவர்களை சரணடையச் செய்யும் பேச்சுக்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஈடுபட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ்.

இலங்கை இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ள ஐ.நா. தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர குழு, அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் மீதும் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திதொடரும் இந்தியாவின் துரோகம் ! நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு.
அடுத்த செய்திஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு