ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச

13

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு என்று அமைச்சர் விமல் வீரவன்ச கிண்டல் செய்து பழித்து பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்தேய நாடுகளுக்குச் சார்பான பொம்மை அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான சதித்திட்டங்களுக்குத் துணை போயுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட் ஆலோசனை பெறுவதற்கான குழுவொன்று தாம் தயாரித்த அறிக்கையை செயலாளர் நாயகம் படித்துப்பார்க்க முன்பதாகவே வெளியிட்ட சம்பவம் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

மூன்று முட்டாள்கள் குழுவின் அங்கத்தவர்கள் மூவரும் பணத்துக்காக விலைபோகக் கூடியவர்கள் என்பது மிகவும் பிரசித்தமான விடயம். அதிலும் குழுவின் தலைவர் தருஸ்மன் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனைய இருவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நீண்ட காலம் தொடக்கம் செயற்பட்டவர்கள். அப்படியான குழுவின் அறிக்கை நோ்மையான முறையில் இருக்கும் என யாரும் கருதவே முடியாது.

இலங்கைக்குள் இன்னொரு நாட்டை ஏற்படுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தை தமது இஷ்டம் போல ஆட்டி வைக்கும் மேற்கத்தேய நாடுகளின் சூழ்ச்சியையே அவர்கள் தங்கள் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்திபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை சீனாவும், ரஸ்யாவும் தடுக்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அடுத்த செய்திஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஒரு புனைகதை – இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்