உயிருடன் சரணடைந்த தளபதி ரமேஷ் படுகொலை: புதிய போர்குற்ற ஆதாரம்

53
தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக, தமிழ்நெட் இணையம் சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் ரமேசை படையினர் தடுத்து வைத்திருக்கும், மற்றும் கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் முன்னர் வெளிவந்திருந்தன.
இராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில், இப் புகைப்படமானது வெளியாகியுள்ளது. கேணல் ரமேஸ் உயிருடன் இருக்கின்றரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் வெளியாகியுள்ள இந்த நிழற்படம் மற்றொரு முக்கிய போர்க்குற்ற ஆதாரமாகும். தற்போது மீண்டும் ஒருமுறை சர்வதேசத்துக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவத்தின் அகோரமான போர் குற்றங்கள். இப் புகைப்படமானது இலங்கை இராணுவத்தின் கொடூரங்களைக் கோடிட்டுக்காட்டுகிறது.
(2ம் இணைப்பு)
கேணல் ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் மே மாதம் 22ம் தேதி விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில் ரமேஷ் அவர்கள் சாதாரன உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை இலங்கை இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை “டேய்” என்று இராணுவம் கூறி அழைத்து அவமானப்படுத்துகிறதும் பதிவாகியுள்ளது. அப்போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
தாம் அவரைக் கொல்ல இருக்கிறோம் என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். ஏதோ அவரிடம் முழுப்பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை எழுதி விசாரணை நடத்துவது போல நாடகமாடியுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த தன்னை இராணுவம் கொல்லாது என நினைத்த தளபதி ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் கடுமையாக தாக்கி கொலைசெய்துள்ளது. இது ஒரு அப்பட்டமான போர்குற்றமாகும்.
ப.நடேசனோடு மற்றுமொரு ரமேஷ் (இளங்கே) இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவர் தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் ஆவார். அவரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் செய்திகள் வெளியாகவில்லை. ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக பாலித கோஹன முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் மறுத்துவிட்டார். ஐ.நா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த, சரணடைவு நிகழ்வுகள் கொடூரமான வகையில் முடிவுக்கு வந்துள்ளது. சரணடைந்த பலர் தற்போது உயிரோடு இல்லை. இதற்கு விஜய் நம்பியார் என்ன பதில் சொல்லப்போகிறார் ?

நன்றி : அதிர்வு

முந்தைய செய்திரஷ்யா சீனா இந்தியா ஆகிய 3 நாடுகளும் போர் குற்றத்துக்கு உடந்தை !
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.