சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை! தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை

110

அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது.     அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது.   அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றது.இதனால் விரக்தியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,   அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்தார்.இதையடுத்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்காமல்  அதிமுக தொகுதிகளை அறிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக்கட்சியினர் மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.பின்னர் அதிமுக கொஞ்சம் இறங்கிவந்து 12  சீட் தருவதாக தெரிவித்துள்ளது.   ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் வைகோ.    அதுமட்டுல்ல வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.அவர்,  ‘’தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை.   21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தருவதாக அதிமுக கூறியதால் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய அவசியம் மதிமுகவிற்கு இல்லை.    தமிழகம் – புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.அவர் மேலும்,  3-வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக நிறைவேற்றிய தீர்மானம் – முழு விவரம்:
’2006 ஆம் ஆண்டு முதல், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த ம.தி.மு.க., தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்ட மன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது.

காளிமுத்து அழைத்ததால்!
2006 ஆம் ஆண்டு, சட்ட மன்றப் பொதுத் தேர்தலின் போது, அ.தி.மு.க. அவைத் தலைவர், நினைவில் வாழும் முனைவர் கா. காளிமுத்து, பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ.தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு, ம.தி.மு.க.வுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசும்போது, “கூட்டணியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு கட்சி இடம் பெறும்” என்று, அதன் பொதுச் செயலாளர் அறிவிக்கவும் செய்தார்.

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடை பெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், ம.தி.மு.க. தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெறவேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது.

தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலானோருடைய கருத்தினை ஏற்று, அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச் செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன.
அந்தத் தேர்தலில், ம.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளைக் குறி வைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.க., தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது.

புயல் வேகப் பிரசாரம்
2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று. அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப்பிரசாரம், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடு நிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும்.
அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அ.தி.மு.க. மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, ம.தி.மு.க., உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.

திருமங்கலத்தில் முதல் ஏமாற்றம்
தமிழக சட்டமன்றத்தில், அ.தி.மு.க.வை ஆதரித்து முழு மனதோடு இணைந்து செயல்பட்டது. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அ.தி.மு.க. தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக்கொண்டது.

கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அ.தி.மு.க.வின் முடிவை, மதி.மு.க.வும் ஏற்றுக்கொண்டது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதிலும், அ.தி.மு.க. அரசால் அனுமதிக்கப்பட்டு, தூத்துக்குடியில் அமைந்து உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதிலும், ம.தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை.

வைகோ மீதான அதிமுகவினரின் பாசம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மகத்தான இயக்கமான அ.தி.மு.க.வின் அடலேறுகளான தொண்டர்கள், ம.தி. மு.கவின் மீதும், அதன் பொதுச் செயலாளர் வைகோ மீதும், பரிவையும் அன்பையும் தொடர்ந்து காட்டி வந்து உள்ளனர்.

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது. இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

35 கேட்டு 30 ஆகி 7 ஆனது
மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது தான் ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டபோதும், மார்ச் 12-ஆம் தேதியன்று மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது.

8 மட்டுமே தர முடியும்
மறுநாள் 13-ஆம் தேதி அ.தி.மு.க தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 14-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் அ.தி.மு.க. சார்பில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மார்ச் 13-ஆம் தேதியன்று அ.தி. மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளை கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியை குறைத்து 7 தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்க சொன்னதாகக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம் ம.தி.மு. க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது.அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணியளவில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் வைகோவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்நாள் கூறிய படி 8 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக அ.தி. மு.க தலைமையின் சார்பில் கூறினார்கள்.

9 தருவதாக கூறினார்கள்
15-ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளரின் பிரதிநிதிகள் வைகோவை சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தரமுடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள். மறுநாள் 16ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மீண்டும் அதே பிரதிநிதிகள் முதல்நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிபடுத்தி, இதை ஏற்றுக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம். நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால் உடன்பாடு குறித்துப் பேசுவோம். அதை தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை என்று கூறி விட்டார்.

திட்டமிட்டு உதாசீனம்
அன்று மாலையிலேயே ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி. முக. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெறவில்லை என்பதை அ.தி. மு.க. தலைமை அறிவித்தே விட்டது.
2006-ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த ம.தி.மு.க.வை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகு முறையைக் கடைப்பிடிக்காமல் திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது.

ம.தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால் 19-ம் தேதியன்று காலை 10 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ம.தி.மு.க தலைமை நிர்வாகிகளை தாயகத்தில் சந்தித்து 12 தொகுதிகளை தருவதாக அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள்.

உள்ளங்களைக் காயப்படுத்திய அதிமுக

ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளை தருவதாக இருந்தால் தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க. தலைமை ம.தி. மு.க.வை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும் கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாக காயப்படுத்தி விட்டது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்பட வில்லை.
அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களை சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி. மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மையற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

சுயமரியாதையை இழக்கத் தேவையில்லை
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.
தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு  , புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், ம.தி. மு.க. உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முந்தைய செய்திSeeman at Gobi
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.