அனைத்து விமான சேவைகளிலும் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் – சீமான் எச்சரிக்கை.

32

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

நம் தமிழ்நாட்டின் சென்னை உட்பட மதுரை,திருச்சி,கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும்,அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும் இயங்குகின்றன.இதில் தமிழர்களே பெரும்பான்மையினர் பயணம் செய்கின்றனர்.தமிழர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.ஆனால் இந்த விமான சேவை எதிலும் மருந்துக்கு கூட தமிழ் இல்லை. அறிவிப்புக்கள்,பயணிகளை வரவேற்கும் வரவேற்புகள் என அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கின்றன.விதிவிலக்காக ஓரிரு தனியார் விமான சேவையில் மட்டும் சில நேரங்களில் தமிழில் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன.தமிழர்களை வைத்து வருமானம் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்கள் தமிழை இழிவுபடுத்தும் விதமாக தமிழைப் புறக்கணிக்கின்றன.இது தமிழர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.தமிழை வைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை.ஆகவே வரும் தைத் திருநாள் மூலம் இந்தியன் ஏர்லைன்ஸ் உட்பட அனைத்து விமான சேவையிலும், உலகெமெங்கும் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் விமானங்கள் ஆகிய அனைத்திலும் தமிழை முதன்மை மொழியாக கொண்டு அறிவிப்புக்கள் மற்றும் வரவேற்பை நல்க வேண்டும்.மேலும் தமிழ் நாளிதழ்கள்,இதழ்களை பயணிகளுக்கு அளிக்க வேண்டும்.இந்த எமது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர்களை ஒன்று திரட்டி இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முந்தைய செய்திதமிழ் தம்பி சீமான் ! – அறிவுமதி
அடுத்த செய்திசீமான் விடுதலை – பெரியார் திராவிடர் கழகம் வாழ்த்து