எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கைகள் வைத்துவரும் நிலையில், ஆலை மீண்டும் இயங்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது போன்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கின்றது.
மக்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு ஆலையை தற்காலிகமாக மூடியிருந்த நிலையில், மீண்டும் ஆலை இயங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து உத்தரவிடுவது விதிகளை மீறும் ஆலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வழியைக் காட்டக்கூடிய தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். குறிப்பாக 1961ல் இருந்து செயல்பட்டு வரும் கோரமண்டல் நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டும், 1987-88 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே விதிமீறல் தொடர்பான சிக்கல்கள் எழுந்த நிலையில் ஆலைக்கு நிரந்தரத் தடை விதிப்பதே சரியாக அமையும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஏமாற்றமளிக்கக்கூடிய உத்தரவு ஒருபுறமிருக்க, ஆலை மீண்டும் இயங்குவதற்கான நிபந்தனைகள் மீது முடிவெடுக்கும் பொறுப்பு மற்றும் தடையின்மை சான்றிதழ் வழங்கும் பொறுப்பு ஆகியவை தமிழ்நாடு அரசிடமே உள்ளது. வடசென்னை மக்களை நள்ளிரவில் தத்தளிக்க விட்ட, அபாயகர ஆலை வேண்டுமா வேண்டாமா என்பதனை தமிழ்நாடு அரசுதான் முடிவெடுக்க வேண்டும். கோரமண்டல் ஆலையா, கோரமண்டல் கடற்கரையா என்பதை தமிழ்நாடு அரசுதான் தேர்வு செய்ய வேண்டும். மீனவர்களின் நலனா பெருமுதலாளிகளின் நலனா என்று முடிவெடுக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது. மீனவர்களின் ஒருமித்த கருத்தினை ஏற்று, கோரமண்டல் ஆலை எந்நிலையிலும் மீண்டும் செயல்படாத வகையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகின்றேன்.
@SMeyyanathan @mkstalin @supriyasahuias @Tnpcbofficial


