தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், முன்னணி இயக்குநரும், தமிழ் மீதும், தமிழர் நலன் மீதும் பெரும்பற்று கொண்ட தமிழ்த்தேசியவாதியுமான பெருமதிப்பிற்குரிய ஐயா வி.சேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்த்திரையுலகினருக்கும், இனமானத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
உறவுகளின் மதிப்பைப் பேசும் குடும்பத் திரைப்படங்களை இயக்கி, எளிய மக்கள் மனங்கவர்ந்த ஐயா வி.சேகர் அவர்கள் கலையுலகோடு தன்னை சுருக்கிக் கொள்ளாது, தமிழ், தமிழர் எனும் களங்களில் தீவிரமாகச் செயலாற்றியவராவார். இத்தோடு, தமிழ் மறையோன் வள்ளுவப்பாட்டன் பெயரில் திருவள்ளுவர் கலைக்கூடம் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, நல்ல படைப்புகளைத் தயாரித்து இயக்கினார். ஐயா அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது படைப்புகள் மூலமாகவும், மக்களுக்கான செயல்பாடுகள் மூலமாகவும் எப்போதும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயாவுக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.



