கர்நாடக மண்ணின் மகள், மரங்கள் வளர்த்து மண்ணை காத்த அன்னை, சுற்றுச்சூழல்
ஆர்வலர், போற்றுதற்குரிய தாய் சாலுமரதா திம்மக்கா தன்னுடைய 114 ஆம் வயதில் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
நூற்றாண்டுக்கு முந்தைய மூட வழக்கப்படி கல்வி கற்க விடாது, குழந்தைப்பருவத்திலேயே திருமணமும் செய்து வைக்கப்பட்டச்சூழலில்,
திருணமாகி குழந்தை இல்லாத அம்மா சாலுமரதா திம்மக்கா தம் கணவருடன் இணைந்து ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். ஒன்று, இரண்டு என்று தொடங்கிய அவருடைய ஆலமரக் குழந்தைகளை வளர்க்கும் நெடும்பயணம் கர்நாடக மாநில நெடுஞ்சாலையில் 5 கி.மீ தூரத்திற்குள் (இன்றைய அளவில் 1.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்ட) 385 ஆலமரங்களை நட்டு வளர்த்தெடுத்து யாராலும் முடியாத தனிமனிதப் பெருஞ்சாதனைப் படைத்துள்ளார் அம்மா சாலுமரதா திம்மக்கா, அவைதவிர 8000 மற்ற மரங்களையும் வளர்த்த பெருமைக்குரியவர்.
தம்முடைய மரம் நட்டு மண் காக்கும் மகத்தான பணிக்காக இந்தியாவின் உயரிய விருதுகள் பல பெற்ற அம்மா சாலுமரதா திம்மக்கா அவர்கள் பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளாலும் போற்றப்பட்டவர். இந்தியாவின் பல மாநிலங்களில் மரம் நடும் திட்டங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது அவருடைய அரும்பணிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.
'ஆலமரங்களின் தாய்' என போற்றப்பட்ட அம்மா சாலுமரதா திம்மக்கா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



