முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட்…

0

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.

நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.

திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!

வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!

அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி2025-2026 ஆண்டு புதிய படங்கள் | செந்தமிழன் சீமான் – வடிவமைப்புக்கான படங்கள் [தரவிறக்கம்]
அடுத்த செய்திNot Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself…